காத்தான்குடியில் புலிகளின் கிளைமோர்த் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பொலிசார் பலி
Read Time:1 Minute, 25 Second
மட்டக்களப்பு காத்தான்குடிப் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிசாரைப் பார்வையிடச் சென்ற பொலிஸ் ஜீப் வண்டி ஒன்று புலிகளின் கிளைமோர்த் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
இச்சம்பவத்தில் நான்கு பொலிசார் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் அப்துல் லத்தீப் சின்னலெப்பை வீதி, காத்தான்குடி 6 என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த மற்றுமொரு பொலிஸ் வாகனம் புலிகளின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளது. இதில் அந்த வாகனத்தில் பயணித்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பலியாகி உள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரு சம்பவங்களிலும் பலியான பொலிசாரின் சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.