நீரிழிவு வலிகளும் வேதனைகளும் !! (மருத்துவம்)
‘‘உலகிலேயே இந்தியாவில்தான் நீரிழிவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகம்! நீரிழிவால் தலை முதல் பாதம் வரை அத்தனை உறுப்புகளுமே பாதிக்கப்படுகின்றன… குறிப்பாக நரம்புகள்! நீரிழிவுக்காரர்களில் 50 சதவிகிதம் பேருக்கு ‘நியூரோபதி’ எனப்படுகிற நரம்பு வலி இருக்கிறது. ஆனால், அது சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியது என்கிற விழிப்புணர்வு பலருக்கும் இருப்பதில்லை. அந்த அலட்சியம் உறுப்புகளை இழக்கும் அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்…’’
எச்சரிக்கையுடன் ஆரம்பிக்கிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார். நியூரோபதியின் அறிகுறிகள், பாதிப்புகள், தீர்வுகள் என சகலத்தையும் பற்றித் தொடர்கிறார் அவர்.
‘‘உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிற போது, நரம்புகளுக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, நியூரோபதி பிரச்னைக்கு வழி வகுக்கலாம். ரத்த அழுத்தம், புகை மற்றும் குடிப்பழக்கங்கள் உள்ளவர்களுக்கு இந்த நரம்பு வலிகளின் தீவிரம் அதிகமாகும். கை, கால்களில் மதமதப்பு உணர்வு ஆரம்பமாகும்.
உணர்ச்சியின்மை, கால்களில் எரிச்சல் மற்றும் ஊசி குத்துவது போன்ற ஊறல் உணர்வு, வலியில்லாத புண்கள் போன்றவை நியூரோபதியின் அறிகுறிகள். சிறிய அளவில் உண்டாகும் புண்களில் கிருமி நோய் தொற்று ஏற்படும். சர்க்கரையின் அளவு அதிகரித்து, ரத்தக் குழாய்களும் அடைத்துக்கொண்டால், கை, கால்கள் அழுகி, அவற்றை இழக்கும் அபாயம் நேரலாம்.
உணவு செரிக்காதது, அடிக்கடி வாந்தி, அடிக்கடி மலம் கழித்தல் அல்லது மலச்சிக்கல், சிறுநீர் கழிப்பதில் பிரச்னை போன்றவை கூட, நரம்பு மண்டல பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். இந்த பாதிப்புகளைத் தொடர்ந்துதான் வலி ஆரம்பிக்கும். சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிக முக்கியமான விஷயம்.
மேலே சொன்ன அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற வேண்டும். வலிக்கான பிரத்யேக மருந்துகள் உதவும். நவீன வலி மருத்துவத்தில் ஊசி மூலம் மருந்துகளை செலுத்தி, நரம்புகளின் வலியைக் குறைக்கும் வசதி உண்டு. கை, கால்களை சுத்தமாகவும் அடி படாமலும் வைத்திருக்க வேண்டும். கைகளுக்கும் கால்களுக்கும் சரியான உறை அணிவது பாதுகாப்பானது.
வெறுங்கால்களுடன் நடக்கக் கூடாது. மாதம் ஒரு முறை மருத்துவரைப் பார்த்து, நியூரோபதி பாதிப்புக்கான சோதனையை மேற்கொள்ளலாம். தக்க நேரத்துப் பரிசோதனை மற்றும் சிகிச்சையின் மூலம் வலி வரும் முன்பே, பாதுகாத்துக் கொள்ளலாம்.’’
Average Rating