மினரல் வாட்டர் அவசியம்தானா?! (மருத்துவம்)
மினரல் வாட்டர் பரிசுத்தமானது என்ற எண்ணம் இப்போது எல்லோருடைய மனதிலும் பதிந்துவிட்டது. இதற்கு நம் நாட்டின் அடிப்படை சூழல்களும் காரணம். இந்தியாவைப் பொறுத்தவரை போதுமான கழிவறை வசதிகள் இல்லாதது, சுற்றுப்புறச்சூழலில் இருக்கும் அலட்சியம் போன்ற காரணங்களால் தண்ணீர் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்த சூழலில்தான் சுத்தமான, சுகாதாரமான தண்ணீர் என்ற வாசகங்களுடன் வரும் மினரல் வாட்டர் நம்மை கவர்ந்துவிடுகிறது.
இன்றைய காலகட்டத்தில் மினரல் வாட்டர் தவிர்க்க முடியாததாகவும் உள்ளது. ஆனால் மினரல் வாட்டரை சுத்தப்படுத்தும் செய்முறையின்போது தண்ணீரில் இயற்கையாகவே உள்ள சில நுண்ணூட்ட சத்துக்கள் அழிகின்றன. அதனால், பாட்டிலில் அடைக்கப்பட்டுள்ள மினரல் வாட்டர் பயன்பாட்டை முடிந்தவரை தவிர்ப்பதே நல்லது. அடிக்கடி மினரல் வாட்டர் குடிக்கும் சூழல் உடையவர்கள், தண்ணீரால் கிடைக்காமல் போகும் சத்துகளை சமன்படுத்த காய்கறிகள், பழங்கள், நல்ல சத்தான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி சாதாரணமாக நமக்குக் கிடைக்கும் தண்ணீரை 10 முதல் 15 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்துக் காய்ச்சிக் குடித்தாலே போதுமானது. தண்ணீரைக் கொதிக்க வைப்பதோடு அந்த தண்ணீரை சரியாக மூடி வைக்க வேண்டும். தண்ணீரைக் கையாள்பவர்களின் தனிநபர் சுத்தம், பயன்படுத்தும் டம்ளரின் சுத்தம் என்று மற்ற விஷயங்களிலும் அக்கறை செலுத்த வேண்டும்!
Average Rating