நியூஸ் பைட்ஸ்: கட்டணமில்லா பயணத்தில் 91.85 கோடி பெண்கள் பயன் !!(மகளிர் பக்கம்)
கட்டணமில்லா பயணத்தில் 91.85 கோடி பெண்கள் பயன்
அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கான கட்டணமில்லா பயண திட்டத்தின் மூலம் இன்று வரை 91.85 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு முன்னேற்றம் அடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரளா மெட்ரோ நிலையத்தில் இசைப் படிக்கட்டுகள்
கேரளாவின் எர்ணாகுளம் எம்.ஜி சாலை மெட்ரோ நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இசைப் படிக்கட்டுகள் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஒருவர் இந்த படிக்கட்டில் ஒவ்வொரு படியாக ஏறி செல்லும் போது, அவை கீபோர்டில் ஒலிக்கும் இசையை எழுப்புவதால், அனைத்து வயது மக்களும் இந்த படிக்கட்டுகளை உற்சாகத்துடன் பயன்படுத்துகின்றனர்.
100 மில்லியன் விதைகளை வானில் பறந்து வீசிய ஸ்கை டைவர்
பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஸ்கை டைவர் லூய்கி கேனி, அமேசான் காட்டில் மரங்கள் அழிக்கப்பட்ட பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்று 14,000 அடி உயரத்தில் இருந்து 27 வகையான மரங்களின் 100 மில்லியன் விதைகளை கொண்ட பெட்டியை வானில் குதித்து திறந்துள்ளார். இதன் மூலம் இன்னும் சில வருடங்களில், அந்த விதைகள் மரங்களாகி காடாகும் என இவர் பெருமையுடன் கூறியுள்ளார்.
இந்திய பெண்கள் வேலை தேடுவதை நிறுத்திவிட்டார்கள்
இந்தியாவில் இளைஞர்கள் தகுந்த வேலை வாய்ப்புகள் கிடைக்காததால் வேலை தேடுவதையே நிறுத்தி விட்டதாக CMIE எனும் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக 2 கோடி பெண்கள் நிரந்தரமாக வேலை தேடுவதையே நிறுத்திவிட்டதாகவும் இந்த அறிக்கை அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.
உலகின் மிகவும் வயதானவர் 119 வயதில் காலமானார்
உலகின் மிகவும் வயதான நபராக கருதப்படும் ஜப்பானிய பெண் கேன் தனகா தனது 119வது வயதில் வயது மூப்பின் காரணமாக காலமானார். இவர் பிறந்த ஜனவரி 2, 1903ல் அதே ஆண்டில் தான் ரைட் சகோதரர்களும் வானில் முதல் முறையாக பறந்தனர். தனகாவின் மறைவிற்குப் பின், இப்போது உலகின் வயதான நபராக பிரெஞ்சு கன்னியாஸ்திரியான லூசில் ராண்டன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரின் வயது 118.
வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் பெண்களுக்கு குழந்தை பராமரிப்பு விடுமுறை
தமிழகத்தில், அரசு வேலையிலிருக்கும் பெண் ஊழியர்களுக்கும், ஆசிரியைகளுக்கும், அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டால், குழந்தையை பராமரிக்க 270 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் சட்டசபையில் அறிவித்துள்ளார்.