
நோய்களை விரட்டும் கற்பூரவள்ளி…!! (மருத்துவம்)
சாதாரணமாக தொட்டியில் குச்சியை ஒடித்து நட்டு வைத்தாலே வேர் பிடித்து நன்கு வளரக்கூடிய ஒரு அற்புத மூலிகை செடி கற்பூரவள்ளி ஆகும். இது மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட மூலிகை ஆகும். கற்பூரவள்ளி இலைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. இதனை ஆங்கிலத்தில் இந்தியன் போரேஜ் என்றும் அழைக்கப்படுகிறது.
இதன் இலைகள் மென்மையாக இருக்கும். இதனை பச்சையாக மெல்லும்போது இதன் சாறு லேசான காரமும் சிறுங்கசப்பு சுவையும் கொண்டது. கற்பூரவள்ளியை பச்சையாக கூட சாப்பிடலாம். அவ்வளவு மருத்துவகுணம் நிறைந்தது. அந்த வகையில் இதனுள் அடங்கி உள்ள மருத்துவ நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.கற்பூரவள்ளி இலைகளை கசக்கி சாறுப் பிழிந்து அதனுடன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி நெற்றியில் பற்று போட தலைவலி குணமாகும்.கற்பூரவள்ளி இலைகளை அரைத்து அதன் சாறுடன் சிறிதளவு தேன் கலந்து உட்கொண்டால் சளித் தொல்லை தீரும்.
காசநோய், கபக்கட்டு, அம்மைக் கொப்புளம் ஆகியவைகளைக் கட்டுப்படுத்தும். தன்மை கற்பூரவள்ளிக்கு உண்டு. இலைகளை தண்ணீரில் இட்டு ஆவி பிடித்தாலும் நெஞ்சு சளி குணமாகும். கற்பூரவள்ளி சூப் செய்ய, கற்பூரவள்ளி இலைகள் – 5, மிளகு – 5, வெற்றிலை எடுத்து சிறிது நீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அந்த நீரை காலை, மாலை பருகி வர ஜலதோஷம் நீங்கும். குழந்தைகளுக்கு சிறிதளவு கொடுத்து வர, சளி, ஆஸ்துமா, காசநோய் அண்டாது.
கற்பூரவள்ளி இலைகளின் சாற்றை ஒரு டம்ளர் அளவு எடுத்து சுண்டக்காய்ச்சி பாதியளவாக்கி வடிகட்டி அருந்தி வந்தால் புகைப்பிடிப்பதால் நுரையீரலில் தங்கியிருக்கும் நச்சுகள், மாசுகள் நீங்கும். கற்பூரவள்ளி இலைகளை கசக்கி அதன் சாற்றை நெஞ்சு, கழுத்து மற்றும் நெற்றி பகுதிகளில் சூடு பறக்க தேய்த்தால், சளியினால் ஏற்பட்ட காய்ச்சல் நீங்கும்.கற்பூரவள்ளி இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மைக் கொண்டது. இது சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகங்களை காக்கிறது.