டீன் ஏஜ் செக்ஸ்?! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:14 Minute, 56 Second

கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…

‘‘டீன் ஏஜ் பருவத்தில் இரு மனங்களுக்கு இடையில் துவங்கும் ஈர்ப்புவிசை இழுவிசையாக பரிணமிக்கிறது. உள்ளத் தேடல்… உடல் தேடலில் தன் இலக்கை அடைகிறது. இது தவறா, சரியா என்ற குழப்பத்தில் இன்றைய பதின் பருவக் குழந்தைகள் சந்திக்கும் சிக்கல்கள் அதிகம்.

படிப்பு, நடத்தை என ஒவ்வொன்றாய் சரிந்து ஒரு  சமூக மனிதன் சமூக விரோதியாக உருவாகிவிடுகிறான். பதின் பருவத்தில் பாலுறவு பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது’’ என்கிறார் உளவியல் ஆலோசகர் பிரவீண்குமார்.

தடுமாறும் கலாச்சாரம்

பொதுவாக, பாலுறவு என்பது திருமணத்துக்குப் பின்புதான் என்ற கலாச்சாரம் நம் நாட்டில் பின்பற்றப்படுகிறது. ஆனால், தகவல் தொழில்நுட்பம் மற்றும் இன்றைய பரபரப்பு வாழ்க்கைமுறை இதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்த்துக் கொண்டிருக்கிறது.

 எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவப் பருவத்திலேயே பாலுறவு குறித்த உரையாடல்கள் துவங்கிவிடுகிறது. பதின் பருவத்தில் உடலுறவு கொள்வது தவறு என்ற எண்ணம் இப்போதைய தலைமுறையிடம் இல்லை.

 17 வயதுக்கு முன்பு பெண் குழந்தைகளிடம் டேட்டிங் வைத்துக் கொள்ளும்போது மாதவிடாய் தள்ளிப் போடுவதற்கான மாத்திரைகள் எடுத்துக் கொள்வதும், கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வதும் அதிகரித்துள்ளது என பல ஆய்வுகள் கூறுகின்றன.

இதிலிருக்கும் பாதகங்களைப் பற்றி பதின்பருவத்தில் இருக்கும் யாரும் யோசிப்பதில்லை. பாலுறவு வேட்கை மீதும், அதன் மீதிருக்கும் ஆர்வம் காரணமாகவும் பெரியவர்களின் அறிவுரைகளைக் கேட்கவும் அவர்கள் தயாராக இல்லை. டீன் ஏஜிலேயே கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வதும், முறையற்ற கருக்கலைப்பும் திருமணத்துக்குப் பின்பு பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.

‘திருமண உறவின் மூலம் நமக்கென்று ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்ற நியாயமான ஆசை வரும்போது டீன் ஏஜில் செய்த தவறுகள் கரு உருவாவதில் சிக்கலை ஏற்படுத்தலாம். உடல் குறைபாடு, மூளை வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகள் பிறக்கவும் வாய்ப்புள்ளது.

ஏனெனில், உடலுறவுக்குப் பின்பு குழந்தை உருவாகாமல் தடுப்பதில் மட்டுமே டீன் ஏஜ் வயதினர் விழிப்புடன் உள்ளனர். கருத்தடை, மாதவிடாய் மாத்திரைகள் எடுப்பதால் உண்டாகும் எதிர் விளைவுகள் குறித்துத் தெரிந்து கொள்வதில்லை.

பாலுறவுத் தேடலில் அதிகரிக்கும் ஆர்வம்

பதின்பருவத்தை எட்டும்போது ஆண்-பெண் உடல் மறு உற்பத்திக்கு தயார் என்பதை இயற்கை பருவமடைதல் என்ற நிகழ்வின் வழியாக உறுதிப்படுத்துகிறது. பருவமடைதலுக்குத் தயாராகும் உடலில் எதிர்ப்பாலின் மீதான ஈர்ப்பை உருவாக்கும் ஹார்மோன்கள் சுரக்கத் துவங்குகின்றன.

ஹார்மோன்கள் மூளையின் செயல்பாட்டில் புதுப்புது மேஜிக் செய்து விளையாடுகிறது. இந்த வயதில் காதல் உணர்வு ஏற்படுவது இயல்பு. அப்படி ஓர் உணர்வு எழாமல் போனால்தான் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம்.  பருவ வயதில் ஏற்படும் பாலியல் ஈர்ப்புக்கான காரணங்களை அறிவியல்பூர்வமாக விளக்க வேண்டும்.

பாலுறவு வைத்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகளையும் அவர்கள் புரியும்படி விளக்க வேண்டியது கட்டாயம். ஏதோ ஓர் ஆர்வத்தில் உடலுறவு கொள்வதால் தேவையற்ற கர்ப்பம் உருவாகலாம். அந்த கர்ப்பம் ஒரு பெண் குழந்தையின் வாழ்வை எப்படி வீணாக்கும் என்பதை தெளிவாக விளக்க வேண்டும்.

இப்படி உருவான கர்ப்பத்தை வெளியில் சொல்லாமல் ரகசியமாக கருக்கலைப்பு செய்வதால் மருத்துவரீதியாக உடல் சந்திக்கும் பிரச்னைகளைப் புரிய வைக்கலாம். பாலுறவு கொள்வதால் மனம் அது குறித்தே சிந்திக்கத் தொடங்குவதால் நடத்தையிலும் மாற்றம் உண்டாகும் என்பதைப் புரிய வைப்பது அவசியம்.

பதின் பருவ பாலுறவின் விளைவுகளை அறிவியல்பூர்வமாக தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பை குடும்பம், பள்ளியில் ஏற்படுத்த வேண்டும். பருவமடைந்த குழந்தைகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் மன நல ஆலோசகரிடம் மனம் விட்டுப் பேசி பாலுறவு குறித்த சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள வாய்ப்பளிப்பதும் இன்றைய தேவை.

மனிதர்கள் பாலுணர்வின் பின்னால் அலையும் விலங்குகள் அல்ல. மனிதர்களுக்கான சமூக மதிப்புகள் உள்ளன. மதிப்புமிக்க ஒரு வாழ்வை தன் அறிவுக்கும் திறமைக்கும் ஏற்ப கட்டமைப்பதற்கான தேவை உள்ளது. இந்த கட்டமைப்புக்கான அஸ்திவாரம் பதின் பருவத்தில் போடப்படுகிறது.

 இதற்கான கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியதும் பதின் பருவமே. இந்தக் காலகட்டத்தில் தன் மதிப்பை அதிகப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும். கல்வியில் முன்னேறுவதிலும், வாழ்க்கைக்குத் தேவையான
திறமைகளை வளர்த்துக் கொள்வதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். எதிர்பாலினர் மீது ஏற்படும் முறையற்ற ஈர்ப்பு, போதைப் பழக்கங்கள் போன்ற நெகட்டிவான சிந்தனைக்கு வாய்ப்பளிக்காமல் பாஸிட்டிவான விஷயங்களில் மனம் செலுத்தப்படுவது அவசியம்.

பதின்பருவத்தில் பாலுணர்வு குறித்த ஆர்வம் ஏற்பட்டாலும் அதை விட முக்கியமான வேலைகள் அதிகம் உள்ளது என்பதை மனதிற்குச் சொல்ல வேண்டும். காமம் என்ற இன்பத்தை அனுபவிப்பதற்கான சரியான காலம் இதுவல்ல என்ற புரிதலும் பதின்பருவத்தினர் புரிந்துகொள்ள வேண்டும்.

பொதுவாக, நமது சமூகவாழ்வில் திருமணத்துக்குப் பின்பே மறு உற்பத்திக்கான தேவை உருவாகிறது. பாலுறவின் தேவையும் நோக்கமும் மறு உற்பத்தியே! படிக்கும் பதின்பருவத்தில் மறு உற்பத்தி தேவை இல்லை என்பதால் தனது மதிப்பை அதிகப்படுத்தும் செயல்களிலேயே ஈடுபட வேண்டும் என்று உணர்ந்த குழந்தைகளுக்கு உணர்த்தவும், அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித்தரவும் வேண்டும்.

டீன் ஏஜ் செக்ஸ்…

செக்ஸ் பற்றிய ஆர்வம் அவர்களை செயலில் இறங்கச் செய்கிறது. பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் இடங்களில் பதின் பருவக் குழந்தைகளுக்கான தனிமை கிடைக்கிறது. அவர்கள் தொலைக்காட்சி, சினிமா மற்றும் சோஷியல் மீடியாக்களில் பார்க்கும் விஷயங்களும் பாலுணர்வைத் தூண்டும் விதமாகவே உள்ளது.

தனிமையான பொழுதுகளில் ஒத்த வயதுடையவர்கள் பாலியல் தூண்டல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். எதிர்பாலினத்தவருடன் இதுபோல நடந்து கொள்வது பிரச்னை என்பதால் லெஸ்பியன் மற்றும் ஹோமோ செக்ஸ் வைத்துக் கொள்வதும் நடக்கிறது.

 டியூஷன் செல்லும் இடங்கள், பள்ளி, விடுமுறை நாட்களில் குரூப் ஸ்டடி ஆகிய சந்தர்ப்பங்களிலும் பாலுறவு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். பாலுணர்வுத் தூண்டல் அதிகம் உள்ளவர்கள் மத்தியில் சுய இன்பம் அனுபவிக்கும் பழக்கமும் உள்ளது. இது அளவுக்கு அதிகமாகும்போது அவர்களது சிந்தனை செயல், நடத்தை அனைத்தையும் பாதிக்கிறது.

எதிர்பாலினத்தவரை இவர்கள் பார்க்கும் பார்வை கூட பாலுணர்வு தொடர்பானதாகவே இருக்கும். ஒரு சிலர் தன்னுடைய சகோதரி, அத்தை போன்ற நெருங்கிய உறவுப் பெண்களைக்கூட பாலியல் கண்ணோட்டத்துடன் பார்க்கும் அபாயமும் உள்ளது.

 போதைக்கு அடிமையாவது போல பாலுறவு சிந்தனைக்கு அடிமை ஆனவர்கள் சிறு வயது குழந்தைகளை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்குகின்றனர். பாலுணர்வு சார்ந்தே இயங்குவதில் சமூக சீரழிவுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

பதின் பருவத்தினரிடம்  பாலியல் சுரண்டல்

பாலியல் குறித்து பெரிதும் விழிப்புணர்வு இல்லாத பதின் பருவத்தினரை திருமணமானவர்கள் தங்களது பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பதின் பருவ ஆண்கள் திருமணமான பெண்களுடன் உறவு கொள்வதால் குழந்தை உருவாகிடுமா என்ற பயத்தை வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறு பாலுறவு கொள்வதால் பால்வினை நோய்கள் மற்றும் எச்.ஐ.வி. தொற்று ஏற்படலாம் என்பது பற்றி இவர்களுக்குத் தெரிவதில்லை.

இது போன்ற அபாயங்கள் பதின் பருவத்தினருக்கு உள்ளது. அதேபோல திருமணமான ஆண்களுடன் பதின் பருவ பெண்கள் பாலுறவு வைத்துக் கொள்கின்றனர். தாய்க்கு வேறு ஆண்களுடன் தொடர்பு இருக்கும்போது அவர்களது மகளும் பாலியல் உறவுக்கு ஆளாக்கப்படுவது நடக்கிறது. இதில் வினோதமாக பதின் பருவப் பெண்கள் தங்களை விட வயதில் மூத்தவர்களுடன் பாலுறவு கொள்வதை அனுமதிக்கின்றனர்.

 அதனால் தன் படிப்பும் கெட்டு வாழ்க்கையே தடம் மாறப் போகிறது என்ற பயமோ, விழிப்புணர்வோ இன்றைய தலைமுறை குழந்தைகளிடம் குறைவாகவே உள்ளது. இதுபோன்ற காரணங்களால் இவர்கள் திருமண மானவர்களால் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

பிரச்னைக்குத் தீர்வு என்ன?

பதின் பருவத்தினரை வழி நடத்துவதில் பெற்றோர், சமூகம், பள்ளி மூன்று தரப்பினருக்கும் பொறுப்புள்ளது. பெற்றோர் தன்னளவில் பாலியல் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். குழந்தைகள் தனிமையில் இருப்பது மற்றும் பதின்பருவத்தினர் சம வயது உடையவர்கள், ஒரே பாலினத்தவருடன் தனிமையில் இருப்பதற்கான வாய்ப்புகளைக் குறைக்க வேண்டும்.

சத்தான உணவு, உடல் சக்தியை எரிப்பதற்கான உடற்பயிற்சிகள், தன்னம்பிக்கைப் பயிற்சிகள் அளிப்பதும் முக்கியம். இந்த வயதில் அவர்களுக்குள் உள்ள தனித்திறன்களைக் கண்டறிந்து அதில் மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு அளிப்பதும் பாசிட்டிவ் எண்ணங்களை அதிகரிக்கும். பாலுணர்வு தொடர்பான ஆர்வம் தவறில்லை. ஆனால் அதன் பின்னால் அலைவது தேவையில்லை என்பதைப் புரிய வைக்க வேண்டும்.

திடீரென தனிமையில் இருப்பது, படிப்பில் நாட்டம் குறைவது, சரியான தூக்கமின்மை, குற்ற உணர்வுடன் இருப்பது, யாருடனாவது நெருக்கமாக இருப்பது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அலர்ட் ஆகுங்கள். பதின் பருவம் என்பதும் இரண்டாவது குழந்தைப் பருவமே. நீங்கள் குழந்தைப் பருவத்தில் காட்டிய அன்பை இப்போதும் மிச்சம் இன்றித் தரத் தயாராகுங்கள் பெற்றோரே.

டீன் ஏஜ் பருவத்தில் உடல் மறு உற்பத்திக்கு தயாராக இருந்தாலும்… அது அந்த வயதுக்கான தேவை அல்ல. பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தால்… பாலுறவுக்கு நிர்பந்திக்கப்பட்டால் மூளையில் ரெட் அலர்ட் பல்ப் எரியட்டும்… மனதில் சைரன் அலரட்டும்… பாலியல் உணர்வின் பின்னால் அலையும் விலங்குகள் அல்ல நாம். மதிப்புக்குரிய மனிதர்கள் நாம்… மதிப்புக்கூட்டுவோம்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post போர்னோ போதை!! (அவ்வப்போது கிளாமர்)
Next post என் ஓவியம்… கற்பனை… சுதந்திரம்! (மகளிர் பக்கம்)