வயிற்றுக்கு சாப்பாடு மட்டுமல்ல… எக்சர்சைஸும் தேவை! (மருத்துவம்)

Read Time:10 Minute, 14 Second

எச்சரிக்கும் இயன்முறை மருத்துவம்!

கர்ப்பகாலம் முழுவ தும் நம் வீட்டில் உள்ள அனைவரது கவனமும் தாய் மீது இருக்கின்ற மாதிரி குழந்தை பிறந்த பின்பும் இருப்பதில்லை. அதனால் அவர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடுகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று, குழந்தை பிறந்த பிறகு வருகின்ற பொதுவானப் பிரச்சனையான வயிற்று தசைகள் பலவீன
மடைந்து பிரிவது. எனவே இந்த விழிப்புணர்வு கட்டுரையில், வயிற்று தசைகளின் பயன் என்ன? ஏன் அவ்வாறு பிரிகிறது? அதை தடுக்க என்ன செய்வது? அதில் இயன்முறை மருத்துவத்தின் பங்கு என்ன என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

வயிற்று தசைகள்…

*கை, கால்களில் இருப்பது போல நம் வயிற்றுப் பகுதியிலும் தசைகள் இருக்கின்றன. நாம் குனியவும் நிமிரவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த தசைகள் மொத்தம் நான்கு ஜோடிகள். இதனை ‘கோர் தசைகள்’ (Core Muscles) என்று மருத்துவத்தில் அழைப்போம்.

*இந்த கோர் தசைகள் நம் கழுத்து, இடுப்புக் கூடு என மேலும் கீழும் தொடர்புடையது. மேலும் நாம் அதிக எடையுள்ள பொருட்களை தூக்கும் போதும், நாம் இருமும் போதும், தும்பும் போதும் என எல்லா நேரத்திலும் மிக முக்கியமாக தேவைப்படும் தசைகள் இவை.

*இதில் முக்கியமான ஒரு தசை ‘ரெக்டஸ் அப்டாமினல்ஸ்’ (Rectus abdominals) எனும் நேர் (vertical) வடிவம் கொண்ட தசை. அதாவது, நம் வயிற்றின் முன் மேல் இருந்து கீழாக அடுக்கடுக்காக இருக்கிறதே ‘சிக்ஸ் பேக்’ அது இந்த தசை தான்.

ரெக்டஸ் டையாஸ்டேசிஸ்…

கருவுற்று மூன்று மாதத்திற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கர்ப்பப்பை விரிய ஆரம்பிக்கும். அதனுடன் கூடவே கர்ப்ப பையின் மேல் உள்ள தசைகள், மென் திசுக்கள், சருமம் என எல்லாம் விரிவடைந்து கொண்டே வரும். இதனால் மேலே குறிப்பிட்ட சிக்ஸ் பேக் தசைகளும் விரியும்.

பிரச்சனை என்னவென்றால் இடது, வலது என இரு பக்கமும் இருக்கும் இந்த தசைகளை நடுவே அடர் திசுக்கள் (தசை நார்) இணைத்திருக்கும். இந்த இணைப்பு பலவீனமாகி பிரிந்து விடும். இது பாதியாகவோ, முழுமையாகவோ பிரிந்து விடலாம். இதுவே ‘ரெக்டஸ் டையாஸ்டேசிஸ்’ (Rectus Diastasis).இந்த பிரச்னை கர்ப்ப காலத்திலும் வரலாம், குழந்தை பிறந்த மூன்று மாதங்களுக்குள் வரலாம்.

காரணம் என்ன..?

*வயிற்று தசைகள் பலவீனமாக இருப்பதே இதற்கு காரணம்.

*கர்ப்ப காலத்தின் போது தசைகளை இலகுவாக தளர்த்த ரிலாக்சின் (Relaxin), எஸ்ட்ரோஜன் (Estrogen) போன்ற ஹார்மோன்கள் இயல்பாக சுரப்பது உண்டு. இதனால் தசைகள் தளர்வாக மாறும். ஆனால் நாம் முன்னரே தசைகளை வலுவாக வைத்திருந்தால் தளர்வாக மாறும் தசைகள் பலவீனமாக மாறாது.

ஆபத்துக்காரணிகள்…

*குழந்தையின் அதிக எடை.

*ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிசுக்கள் வயிற்றில் இருப்பது.

*அடுத்தடுத்து குழந்தை பெற்றுக்கொள்வது. அதாவது, குழந்தை பெற்று ஓராண்டுக்குள் அடுத்த கருவை சுமப்பது.

*சுகப்பிரசவத்தின் போது அதிகமாக முக்குவதால் (Push) கூட நிகழலாம்.

அறிகுறிகள்…

*குழந்தை பிறந்த பின்பும் வயிறு குழந்தை இருப்பது போலவே இருப்பது.

*தொப்புள்கொடியை சுற்றிய சருமம் வித்தியாசமாக சுருக்கமாக இருப்பது (தொட்டால் ஜெல்லி போன்று ஒருவித இருக்கம் இல்லாமல் இருப்பது).

*எடைகள் தூக்கும்போது வயிற்றில் வலிப்பது.

*முதுகு வலி.

*மலச்சிக்கல்.

*வயிறு உப்பசமாக இருப்பது.

*இருமும் போதும், தும்பும் போதும் வயிற்றில் வலி ஏற்படுவது. கூடவே, சிறுநீர் சொட்டுகள் வெளியேறுவதும் சிலருக்கு நிகழலாம்.

எப்படி கண்டறிவது..?

*நீங்கள் இதனை வீட்டிலேயே பரிசோதனை செய்யலாம். நம் முகம் மேலே பார்த்து இருப்பது போல் படுத்துக் கொண்டு இரு கால்களையும் மடக்கி வைக்க வேண்டும்.

*பின் நம் கழுத்து மற்றும் மேல் முதுகு மேலே உயரும் படி எழுந்திருக்க வேண்டும். கொஞ்ச நேரம் அதே நிலையில் இருந்து, ஒரு கை விரலினால் நம் தொப்புள்கொடி கோட்டினை மேலிருந்து கீழாக அழுத்திக் கொண்டே வர வேண்டும். எங்கு பல்லமாக, இடைவெளி இருக்கின்றதோ அதுதான் தசை நார் பிரிந்த இடம். இது எவ்வளவு இடைவெளியில் இருக்கிறது என்பதனை கவனிக்க வேண்டும். அதாவது ஒரு விரலா அல்லது இரண்டு மூன்று விரல்கள் அளவிற்கா என.

*70 சதவிகிதம் தொப்புள்கொடிக்கு மேலேயும், 30 சதவிகிதம் தொப்புள்கொடிக்கு கீழேயும் இந்தப் பிரிவு நடக்கலாம்.

*பின் அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகி, உறுதி செய்து கொள்ள வேண்டும்.

*மேலும் தேவைப்படுமாயின் ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுவீர்கள்.

சிகிச்சை முறை…

இந்தப் பிரச்சினை அறுபது சதவிகிதம் பெண்களுக்கு வரும் எனினும், அதுவே இயல்பாக குழந்தை பெற்ற பின் கூடிடும். ஆனால் சில பெண்களுக்கு இரண்டு சென்டிமீட்டர் மேல் பிரிந்திருந்தால் தானாகக் கூடுவதில்லை.

இதற்கான தீர்வு உடற்பயிற்சியில் மட்டுமே உள்ளது என்பதால், உங்கள் இயன்முறை மருத்துவர் உங்களை முழுவதும் பரிசோதனை செய்து பயிற்சிகள்
பரிந்துரைப்பார்.

தொடர்ந்து அவர்கள் பரிந்துரைக்கும் வயிறு தசைகளுக்கான வலிமை பயிற்சிகளை செய்து வந்தால் விரைவில் பிரிந்த தசைநார் குணமடைந்து கூடிவிடும்.

செய்ய வேண்டியவை..?

*பரிந்துரைக்கப்பட்ட உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வர வேண்டும்.

*படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது ஒரு பக்கமாக திரும்பி, கையினை ஊன்றி எழுவது நல்லது.

*கீழே அமர்ந்திருந்தால், முதலில் கைகளை ஊன்றி எழுந்திருப்பது நல்லது.

*தலையணைகளை முதுகுக்கு பின்னே வைத்து அமர வேண்டும். இதனால் முதுகுக்கு அதிக பாதிப்பு இருக்காது. ஏனெனில் வயிறு தசைகள் பலவீனமாக இருந்தால் முதுகு வலி வரக்கூடும்.

*இருமும் போதும், தும்பும் போதும் வயிற்று தசைகளை பிடித்துக் கொண்டு செய்ய வேண்டும்.

செய்யக்கூடாதவை..?

*‘பைண்டர்’ (Binder) எனப்படும் பெல்ட்டினை நீங்கள் அணிவதால் எந்தப் பயனும் இல்லை. ஏனெனில் இதனால் தசைநார் குணமடையவோ, கூடவோ வாய்ப்பில்லை.
*அதிக எடை தூக்கக் கூடாது.

*யூடியூப் போன்றவற்றை பார்த்து அவர்கள் செய்யும் உடற்பயிற்களை நீங்கள் செய்ய வேண்டாம். ஏனெனில் சில பயிற்சிகள் மேலும் நிலைமையை மோசமடைய செய்யும்.

தடுக்கும் வழிகள்…

*கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும் முன்னரே சில வகையான உடற்பயிற்சிகளை நாம் செய்ய வேண்டும்.

*அப்படி இல்லையெனில் கர்ப்பம் தரித்த முதல் நாள் முதல் உடற்பயிற்சிகள் செய்யலாம்.

*சிலருக்கு கர்ப்பகாலத்தில் நடக்கக் கூட கூடாது என மகப்பேறு மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதனால் பயிற்சிகள் செய்ய முடியாது. அப்படிப்பட்டவர்கள் குழந்தை பெற்றபின் பயிற்சிகளை தொடங்கலாம்.

*முதல் பிரசவத்தில் தசைநார் பிரிந்தால், இரண்டாவது பிரசவத்திலும் இது நிகழலாம் என்பதால் குறைந்தது மூன்று வருட இடைவெளி இருக்க வேண்டும். மேலும் பயிற்சிகளும் செய்து வரவேண்டும்.

மொத்தத்தில், சில உடல் நலப் பிரச்னைகள் நமது அறியாமையால், அலட்சியத்தால்தான் வருகிறது என்பதனை அறிந்து விழிப்புணர்வோடு செயல்பட, புது அம்மாக்களுக்கு அன்பான வாழ்த்துகள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஃபுட் ஆர்ட்டில் கலக்கும் ரேவதி!! (மகளிர் பக்கம்)
Next post ஆரோக்கியம் காக்கும் கற்றாழை!! (மருத்துவம்)