வேப்பிலை வைத்தியம்!! (மருத்துவம்)
பசுமையான ஒரு மர வகைதான் வேம்பு. இது உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த மருத்துவத்தன்மை கொண்ட தாவர இனம். வேப்பமரம் ஆயுர்வேதத்தில் இயற்கையின் மருந்தகமாக அறியப்படுகிறது. வேப்பமரத்தில் மிகவும் நன்மை பயக்கும் ரசாயன மூலக்கூறுகள் நிறைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வேப்பமரத்தின் பட்டை முதல் வேப்ப இலைகள், பூ, பழம், விதை மற்றும் வேர் வரை அனைத்துப் பகுதிகளும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துவதில் பயன்படுத்தப்படுகின்றன.
தினமும் வேப்பிலையை உட்கொண்டால், அது உடலிலுள்ள புற்றுநோய் செல்களின் எண்ணிக்கையை ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் வைத்திருக்க உதவுகிறது. மூலிகை இலைகளில் மிகவும் சக்திவாய்ந்த ‘வேம்பு’ கருவேம்பு, மலைவேம்பு, சர்க்கரை வேம்பு என மூன்று வகையானது. இதன் பூ, காய், பழம், ஈர்க்கு, எண்ணெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, பிசின் அனைத்தும் மிகுந்த மருத்துவப் பயன் கொண்டவை. மேலும் இந்த மரத்திலிருந்து வீசும் காற்றும் மருத்துவ தன்மை உடையது.
* வேப்பிலையையும், ஓமத்தையும் சம அளவு எடுத்து அரைத்து நெற்றிப் பொட்டில் பற்று போட்டால் மூக்கில் ரத்தம் வடிவது நின்று விடும்.
* வேப்பம் பூவை கஷாயமாக்கி அருந்த அஜீரணக் கோளாறு நீங்கி, நல்ல பசி ஏற்படும்.
* வேப்பம் பூவையும், எண்ணெயையும் சேர்த்து அரைத்து கட்டிகளின் மேல் வைத்து கட்டி வந்தால் எவ்வளவு கொடிய கட்டிகளானாலும் உடைந்து குணமாகும்.
* தோலில் வரும் எந்த நோயானாலும் வேப்பெண்ணெய் தடவி வர குணமாகும்.
* வேப்பெண்ணெயை ஆசன வாயில் தடவி வர ஆசனவாய் வெடிப்பு மறைந்து விடும்.
* வேப்பங் கொழுந்தை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து அந்நீரை தினமும் முகம் கழுவிவர முகப்பரு நீங்கும்.
* வேப்பம் பூவை வதக்கி துவையலாக்கி சாப்பிட பித்தம் குணமாகும்.
* வேப்பிலையையும், மஞ்சளையும் சேர்த்து அரைத்து பித்தவெடிப்பு, நகச்சுற்றுக்கு போட நல்ல பலன் கிடைக்கும்.
* வேப்பிலையை நன்கு அரைத்து சாறு எடுத்துக் கொண்டு, இதனுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து உறங்க செல்லும் முன் அரை டம்ளர் அளவு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
* வேப்பம் பூவையும், மிளகையும் நெய்யில் வறுத்து பொடி செய்து சூடான உணவுடன் உண்ண நாவுக்கு ருசியும், நல்ல பசியும் உண்டாகும்.