உயிர்நீத்த படைவீரர்களின் குடும்பங்கள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சந்திப்பு
உயிர்நீத்த படைவீரர்களின் குடும்பங்களை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சந்தித்து அவர்களின் சேம நலன் குறித்து ஆராய்ந்துள்ளார். மாவிலாறு முதல் இடம்பெற்று வரும் மனிதாபிமான நடவடிக்கையில் உயிர்நீத்த படைவீரர்களின் உறவினர்களுக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்குமிடையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிர் நீத்த குடும்பத்தினர் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து பாதுகாப்பு செயலாளர் மிகுந்த அக்கறையுடன் கேட்டறிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. உயிர்நீத்த படைவீரர்களின் உயிர்களை மீண்டும் பெற முடியாது போனாலும் அவர்களின் பெயர்கள் நாட்டின் என்றும் நினைவு கூறப்படுமென கோத்தபாய இதன்போது தெரிவித்துள்ளார். அத்துடன், வவுனியா, திருமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் புலிக்கொடி பறந்த நிலையில் எமது துணிச்சல் மிக்க படைவீரர்களின் வீரதீர செயல்களினால் அந்த பகுதியில் நாட்டின் தேசியக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் உட்பட சகல தரப்பினரும் நாடு முழுவதும் சுதந்தரமாக நடமாடக்கூடிய சூழல் உருவாகியுள்ளதெனவும் படையினரின் அளப்பரிய சேவையை மக்களால் மறக்க முடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டினார். உயிர்நீத்த படைவீரர்களின் குடும்பங்களுக்கு நன்மைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. அநுராதபுரத்தில் இவர்களின் குடும்பங்களுக்கென 2500வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏனைய பகுதிகளிலும் ரணவிரு வீடமைப்பு திட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating