கருணா தரப்பு ஆயுதங்களைக் களைய வேண்டிய அவசியம் எமக்கில்லை – வெளிவிவகார அமைச்சர்
புலிகள் தமிழ்மக்களின் உரிமைக்காக போராடவில்லை. தங்களின் இருப்பை காப்பாற்றுவதற்காகவே போராடுகின்றனர். என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று சபையில் தெரிவித்துள்ளார். கருணா குழுவுக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை.
எனவே கருணா குழுவிடமிருந்து ஆயுதங்களை களையவேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை. தமிழ்செல்வனுக்கும் சூசைக்குமிடையில் முரண்பாடுகள் நிலவுகின்றன. தமிழ்செல்வனோ சூசையோ இயக்கத்தை வி;ட்டுப் பிரிந்தால் அவர்களிடமிருந்து ஆயுதங்களை களையுமாறு புலிகள் எம்மிடம் கேட்பார்கள்.
புலிகளின் உள்விவகாரங்களில் அரசாங்கம் தலையிட முடியாது. கருணா புலிகளிடமிருந்து பிரிந்தபோது அது உள்வீட்டு பிரச்சினை என்று புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் கூறியிருந்தார். பின்னர் எதற்காக கருணாவிடமிருந்து ஆயுதங்களை களையுமாறு எம்மை வற்புறுத்துகிறார்கள்.
தமிழ் மக்கள்மீது அக்கறையிருந்தால் புலிகள் பேச்சுக்கு வரவேண்டும். ஆனால் அவர்கள் பேச்சுக்கு வரமாட்டார்கள். புலிகள் தங்கள் இருப்பை தக்க வைக்கவே போராடுகிறார்கள். என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.