அவுஸ்திரேலியாவின் வடக்குக் கரையை சென்றடைந்த 56பேர் கைது
அவுஸ்திரேலியாவின் வடக்குக் கரையோரப் பகுதியை நோக்கி 56பேருடன் சென்றடைந்த படகொன்றினை அந்நாட்டு அதிகாரிகள் வழிமறித்துள்ளனர். படகில் பயணித்த 54பேரையும், மாலுமிகள் இருவரையும் அவுஸ்திரேலியக் கடற்படையினர் கைது செய்துள்ளதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சின் பேச்சாளர் பொப் டபிள்ஸ் கூறியுள்ளார். புகலிடம் கோருவோரைப் பதிவுசெய்யும் கிறிஸ்மஸ் தீவிலுள்ள முகாமிற்கு இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாமென அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சு ஐயம் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறும் மோதல்கள் காரணமாக அந்த நாடுகளிலிருந்து வெளியேறும் மக்கள் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு வருவதாகவும், இலங்கையின் மோதல் கடைசிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அதிகளவிலான அகதிகளின் வருகையை எதிர்பார்த்திருப்பதாகவும் கடந்தவாரம் அவுஸ்திரேலியா தெரிவித்திருந்தது. கடந்தவாரம் அவுஸ்திரேலியாவை அண்மித்த கடற்பகுதியில் தஞ்சம்கோரும்; வகையில் படகொன்றில் சென்றடைந்த 32பேர் அவுஸ்திரேலியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Average Rating