டோக்கியோ கூட்டத்தின் தீர்மானங்கள்
நாட்டில் சீர்கெட்டுள்ள நிலைமைகளை சீர்செய்யவும் அமைதிவழியில் நாட்டை முன்னெடுத்துச் செல்லவும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு புலிகளுக்கும் அரசுக்கும் இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகள் நேற்றுமுன்தினம் ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் நடைபெற்ற கூட்டத்தில் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
அவ்வாறு இலங்கையில் அமைதிகாக்கத் தவறினால், சர்வதேச சமூகத்தின் ஆதரவை இழக்க நேரிடுமென்றும் அந்நாடுகள் இருதரப்பினரையும் எச்சரித்துள்ளன. இலங்கையின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்துவதுடன், இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் உட்பட்ட சகல மக்களையும் திருப்திப்படுத்தக் கூடிய புதிய அரசியல் மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.
நாட்டின் இறைமைக்கு பங்கம் ஏற்படாதவாறும், தமிழ், முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும், சகல மக்களும் இணங்கும் வகையிலுமாக அரசியல் தீர்வொன்றை வழங்க சர்வதேச சமூகம் தனது முழுமையான ஆதரவை வழங்கும். தவறும் பட்சத்தில் சர்வதேச ஆதரவினை இலங்கையரசு இழக்க நேரிடும். என்றும் அவை தெரிவித்துள்ளன.
புலிகள் வன்முறைகளை கைவிட்டு பேச்சுக்களில் இணைந்துகொள்ள வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வு என்ற விடயத்தை புலிகள் ஏற்கவேண்டும். இத்தீர்வானது இலங்கையில் வாழும் சகல மக்களதும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கக் கூடியதாக இருக்கவேண்டும்.
தவறும் பட்சத்தில் புலிகள் ஆழமாக தனிமைப்படுத்தப்படுவார்கள். என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் மனித உரிமைகளை மதிக்க வேண்டுமென்றும் இக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.