லண்டனில் பிரபாகரனின் மகளின் 18 ஆவது பிறந்த தின விழா. பாலா அங்கிள் கலந்து கொள்வார்.
பிரபாகரனின் மகளின் பிறந்த தினம் ஜூன் மாதம் 4 ஆம் திகதியாகும். அவர் தனது 18 வயதில் தற்போது லண்டனிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்று வருகிறார். அவருடைய 18வயது பிறந்த நாளை பெரிய அளவில் கொண்டாடுவதற்கு லண்டன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அவருடைய இந்தப் பிறந்த தினக் கொண்டாட்டங்களில் பிரபாகரனின் மகனாகிய சாள்ஸ் அன்ரனியும் பங்குபற்றவுள்ளார். அவர் தற்போது அயர்லாந்தில் கல்வி கற்று வருகிறார். பிரபாகரனின் ஒரே மகளாகிய துவாரகாவின் இந்த பிறந்ததின கொண்டாட்டங்களில் பங்குபற்றுவதற்காக தெரிந்தெடுக்கப்பட்ட பல விசேட பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிறந்த தின விழா பற்றி பிரபாகரனின் மனைவி மதிவதனி கூறியதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப பிரபாகரனின் மகளின் பிறந்த தின கொண்டாட்டங்களில் பங்குபற்றுவதற்கு சிறீலங்காவிலோ அல்லது பிரிட்டனிலோ செயற்படும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எந்தவொரு நபருக்கும் அழைப்பு விடப்படவில்லையென்றும் பிறந்த தின விழா தமது குடும்ப விடயம் என்பதால் புலிகள் இயக்கத் தலைவர்கள் எவரும் அதில் பங்குபற்றமாட்டார்கள் எனவும் பிரபாகரனின் மனைவி அறிவித்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
நோர்வேயில் புலிகள் கலந்துகொள்ளும் அனுசரணையாளர்களுடனான சந்திப்பில் பாலசிங்கம் அவர்கள் சுகவீனம் காரணமாக கலந்து கொள்ள மாட்டார் என செய்திகள் தெரிவித்த போதும் துவாரகாவின் பிறந்த நாள் விழாவில் பாலா அங்கிளும் அடல் அன்ரியும் கலந்து கொள்வார்கள் என நம்பிக்கையான வட்டாரங்கள் தகவல் தெரிவித்திருக்கின்றன.
மேற்படி பிரபாகரனின் மகளுடைய பிறந்த தினம் பற்றி தமிழ்ப் பிரமுகர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு குறித்த பிறந்த தினம் பெரிய முறையில் கொண்டாடப்படுவதை விரும்பவில்லை எனத் தெரிவித்திருப்பதுடன் தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டை விற்று தமிழ் மக்களிடமிருந்து சேகரிக்கப்படும் நிதிகள் இவ்வாறு செலவு செய்யப்படுவதா எனவும் புலிகள் இயக்கத்தின் ஏனைய தலைவர்களும் அவர்களின் பிள்ளைகளும் உயிரைத் தியாகம் செய்து போராடி வரும்போது இவ்வாறு பெரிய முறையிலான பிறந்த தின விழா கொண்டாடுவதா எனவும் பிரபாகரனின் தியாகம் இதுவா எனவும் கேள்வி கிளப்பியுள்ளார்.
Thanks….Thenee.com