மட்டக்களப்பு சிறை உடைப்பு: ஏழு கைதிகள் தப்பியோட்டம்
மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள சிறையிலிருந்து ஏழு கைதிகள் இன்று காலை தப்பியோடியுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கழமை காலை ் இச்சம்பவம் இடம்பெற்றதாக மட்டக்களப்பு சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தப்பியோடிய கைதிகளின் விவரங்கள் முழுமையாக இதுவரை தெரியவில்லை. அவர்களில் ஏழு பேர் சிறைச்சாலை பாதுகாவலர்களை ஆயுதங்களால் மிரட்டி விட்டே தப்பிச்சென்றுள்ளனர் என்று தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை வட்டாரங்கள், தப்பியோடியவர்களை தேடி மட்டக்களப்பு சந்து, பொந்துகள் எங்கும் வலை விரித்து தேடிவருகின்றன.
இவர்கள் அனைவரும் ஆயுதங்களுடன் கைதானவர்கள் என்றும் இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்ற சந்தேகிக்கத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தவர் என்றும் சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தை அடுத்து சிறைச்சாலையை அண்மித்த கோவிந்தன் வீதி, நல்லையா வீதி, மத்தியூஸ் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்தையும் சுற்றிவளைத்து சல்லடையிட்டு தேடுதல் நடத்தியுள்ளனர். சிறைச்சாலையினுள்ளும் பாரிய தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.