ஆயுதங்களை ஒப்படைத்த பின்னரே புலிகளுடன் பேச்சு: ஜே.வி.பி.
ஆயுதங்களை ஒப்படைத்த பின்னர்தான் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை வைத்திருப்பதால் எதுவித தீர்வும் ஏற்படுவது கடினமானதாக உள்ளது. வட அயர்லாந்தில் கூட இறுதித் தீர்வுக்கு முன்னதாக ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன. இதுதான் ஜே.வி.பி.யினது நிலைப்பாடு.
விடுதலைப் புலிகளின் ஆயுதக்களைவு தொடர்பாக நோர்வே செயற்பட வேண்டும். அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மட்டுமே இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் செயற்படுகின்றனர்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அவர்கள் இயங்கவில்லை. அவர்களால் சில பகுதிக்குச் செல்ல முடியவில்லை.
வடக்கு கிழக்கு மக்கள் ஜனநாயக உரிமைகளைப் பெற வேண்டும். அது தற்போது மறுக்கப்பட்டு வருகிறது. வடக்கு கிழக்கு இளைஞர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பகிரங்க வேண்டுகோள் விடுக்க வேண்டும்.
அதன் பின்னர் அந்த இளைஞர்களுக்கு நல்ல கல்விச் சூழ்நிலையையும் வேலை வாய்ப்பையும் உருவாக்கித் தர வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான ஆயுத விநியோகத்தைத் தடுக்குமாறு ஆசிய பிராந்திய நாடுகளை சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக்கொள்ள வேண்டும் என்றார் சோமவன்ச அமரசிங்க.