கருணாநிதிக்கு மத்திய அரசு பரிசு-வைகோ கிண்டல்
முதல்வர் கருணாநிதி டெல்லி சென்றுள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அவருக்கு பரிசு கொடுத்துள்ளது மத்திய அரசு என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு நடுத்தர, சாமானிய மக்களின் சுமையை மேலும் அதிகரிக்கும்.
மாநில அரசு விற்பனை வரியைக் குறைத்து பெட்ரோல், டீசல் விலை குறைப்பு செய்யலாம் என கடந்த ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு யோசனை தெரிவித்தார் கருணாநிதி. இப்போது அவர் விற்பனை வரியைக் குறைக்க உத்தரவிடுவாரா?
பெட்ரோல், டீசல் விலை உயர்வு சரி, அதை எதிர்த்து இடது சாரிக் கட்சிகள் அறிவித்துள்ள போராட்டமும் சரி என்று கருணாநிதி கூறியிருப்பது மக்களை ஏமாற்றும் செயல். பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உடனடிõயகத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ.
விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் மத்திய அரசுக்குக் கொடுத்து வரும் ஆதரவை, இடது சாரிக் கட்சிகள் திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.