பாண்டிச்சேரி அதிமுக கூட்டணியிலிருந்து கண்ணன் கட்சி விலகியது
பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக முன்னாள் அமைச்சர் கண்ணன் தலைமையிலான பாண்டிச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து கண்ணன் கட்சி தேர்தலில் போட்டியிட்டது.
ஆனால் தேர்தல் பணிகளில் கண்ணன் கட்சியினருடன், அதிமுகவினர் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கண்ணன் கட்சியினர் பெரும் அதிருப்தி அடைந்தனர். ஜெயிக்க வேண்டிய தொகுதிகளில் கூட அக்கட்சி தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில் தற்போது அதிமுக கூட்டணியிலிருந்து கண்ணன் கட்சி விலகியுள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கண்ணன், வருகிற உள்ளாட்சித் தேர்தலை நாங்கள் தனித்து சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம். உள்ளூர் பெரியவர்களின் ஆதரவுடன் உள்ளூரில் செல்வாக்குள்ள நபர்களை வேட்பாளர்களாக நிறுத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.
இதற்கிடையே, பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பாண்டிச்சேரி, உழவர்கரை, காரைக்கால் ஆகிய நகராட்சித் தலைவர் பதவிக்கு அதிமுக போட்டியிட முடிவு செய்துள்ளது.