கனடாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம்: இந்தியர் உள்பட 17 தீவிரவாதிகள்? கைது
கனடாவில் ஒண்டாரியோ நகரில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாகவும், வெடிகுண்டுகளை குவித்து வைத்ததாகவும் 17 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.கனடாவில் டொரண்டோ நகரில் போலீஸ் உதவிக்கமிஷனர் மைக் மெக்டோனல் 17 இஸ்லாமியத் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட செய்தியை நிருபர்களிடம் வெளியிட்டார்.
அவர்கள் 3 டன் அமோனியம் நைட்ரேட்டை குவித்து வைத்து இருந்ததாகவும் அதை வைத்து வெடிகுண்டு தயாரிக்க அவர்கள் ஏற்பாடு செய்ததாகவும் அவர் தெரிவித்தார். அதோடு ஒண்டாரியோ நகரில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாகவும் அவர் கூறினார். வெடிகுண்டு தயாரிப்பதற்கு தேவையான கருவிகளையும் வெடி மருந்து களையும் அவர் காட்டினார்.
கைதான 17 பேரில் 5 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். மற்ற 12 பேர் 19 வயது முதல் 43 வயதுடையவர்கள். இவர்களில் வயதில் முத்தவர் கய்ïம் அப்துல் ஜமால். அவர் வயது 43 ஆகும் என்றும் அவர் சொன்னார்.
கைதான 17 பேரில் ஸ்டீவன் விகாஸ் சந்த் என்ற அப்துல் ஷக்குர் என்பவரும் ஒருவர். 25 வயதான அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறிய இந்தியர் ஆவார். அவரது தம்பி அல்வின் சந்த் என் அண்ணன் தீவிரவாதி இல்லை என்றும் தவறுதலாக அவரை கைது செய்து விட்டார்கள் என்று கூறி இருக்கிறார்.
அமெரிக்காவில் 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டபோது அவர்களுடன் சில கனடா நாட்டு குடிமக்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று அமெரிக்க போலீஸ் அதிகாரி ரிச்சர்டு கொல்கோ கூறினார்.
கைதான தீவிரவாதிகள் ஒட்டாவா நகரில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தையும் டொரண்டோவில் உள்ள போலீஸ் உளவுத்துறை தலைமை அலுவலகத்தையும், குண்டுவைத்து தகர்க்க திட்டமிட்டதாகவும் தெரியவந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
டொரண்டோ மசூதி இமாம் ஆன அலி ஹின்டி கூறுகையில், “கைதானவர்களில் பலரை நான் அறிவேன். ஒன்று அல்லது 2 பேர் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கலாம். ஆனால் அவை தீவிரவாதம் தொடர்பானவை அல்ல” என்று குறிப்பிட்டார்.
17 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதும் சமூக விரோத சக்திகள் டொரண்டோ நகரில் உள்ள மசூதியை சேதப்படுத்தினர். ஜன்னல்கள் உடைக்கப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.