சரத்குமார் ராஜிநாமா ஏற்பு
மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் நடிகர் சரத்குமாரின் ராஜிநாமாவை மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான பைரோன் சிங் ஷெகாவத் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
அவரது ராஜிநாமா, மே 31-ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. சரத்குமாரின் பதவிக் காலம் முடிய இன்னும் ஓராண்டு உள்ளது. தற்போது அவர் ராஜிநாமா செய்திருப்பதால் ஏற்பட்ட காலியிடத்துக்கு தேர்தல் நடைபெறும்.
தேர்தல் நேரத்தில் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த சரத்குமார், தனது ராஜிநாமா கடிதத்தையும் திமுக தலைவர் கருணாநிதிக்கு அனுப்பினார். ஆனால், சரத்குமார் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கருணாநிதி கோரியிருந்தார். அதனால், அக் கடிதத்தை மாநிலங்களவைக்கு திமுக அனுப்பவில்லை.
இந் நிலையில், தனது முடிவை மறுபரிசீலனை செய்ய முடியாது என்று கருணாநிதிக்கு இரண்டாவது கடிதம் அனுப்பினார் சரத்குமார்.
இந் நிலையில், அக் கடிதம், அவர் அதிமுகவில் சேர்ந்த செய்தி உள்ளிட்ட விவரங்களை மாநிலங்களவைத் தலைவருக்கு அனுப்பினார் திமுக எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான சண்முகசுந்தரம். இதையடுத்து, சரத்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, இன்னொரு ராஜிநாமா கடிதத்தை சரத்குமார் நேரடியாக மாநிலங்களவைத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். அதுதொடர்பாக திமுகவின் கருத்துக் கேட்கப்பட்டு, அவரது ராஜிநாமா ஏற்கப்பட்டது.