கோயில் விழாவில் ரூ.785-க்கு விலைபோன எலுமிச்சம் பழம்
தமிழக பரமத்திவேலூர் தாலுகா பாலப்பட்டி அருகே உள்ள செங்கப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோயில் விழாவில் எலுமிச்சம் பழம் ஏலம் விடப்பட்டது.
செங்கப்பள்ளியில் கடந்த ஒரு மாதமாக பொன்னர் சங்கர் கதை பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு சனிக்கிழமை கலசங்கள் பூஜையில் வைக்கப்பட்டு அத்துடன் மூன்று எலுமிச்சை பழங்களும் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை பொன்னர்-சங்கரை அவரது தங்கை தங்காயி உயிருடன் எழுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சம் பழங்கள் ஏலம் விடப்பட்டன. இதில் முதல் பழத்தை ரூ.785-க்கு செங்கப்பள்ளியைச் சேர்ந்த செல்வம் என்பவரும், இரண்டாவது பழத்தை ரூ.520-க்கு சேகர் என்பவரும், மூன்றாவது பழத்தை ரூ.555-க்கு கார்த்திக் என்பவரும் ஏலம் எடுத்தனர். பூஜையில் வைக்கப்பட்ட பழங்களை வீட்டில் வைத்திருந்தால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.