யாழ். மாவட்டத்தில் மீளக்குடியமர வந்த சிங்களக் குடும்பங்களின் தேவைகள் குறித்து அறிய சமுர்த்தி அதிகாரிகள் அங்கு விஜயம்..!
யாழ். மாவட்டத்தில் மீளக்குடியமர வந்துள்ளதாகக் கூறும் சிங்களக் குடும்பங்களின் தேவைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக சமுர்த்தி அதிகார சபையின் தலைமையக அதிகாரிகள் குழு நேற்று இங்கு வருகைதந்தது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின்கீழ் இயங்கும் சமுர்த்தி அதிகாரசபையின் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கமைய இந்த அதிகாரிகள்குழு நேற்றுமுன்தினம் மாலை யாழ்ப்பாணம் சென்றிருந்தது. சபையின் அதிகாரியான எல்.கே.ஜி. குணதிலக்க தலைமையில் வந்த குழுவினர் சிங்கள மக்களுக்கு படிவங்களை வழங்கி விவரங்களைச் சேகரித்துள்ளனர். சிங்கள மொழியிலான அந்தப் படிவங்களை பூரணப்படுத்தி வழங்குமாறு கோரியுள்ளனர். மேலும் 500 குடும்பங்கள் நேற்று மீளக் குடியமர்வதற்காக வருவதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தபோதும், 10 குடும்பங்களே வருகை தந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இன்றும் மேலும் சில குடும்பங்கள் இங்கு வந்துசேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இதுவரை தமிழ் மக்களே தங்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கி வருவதாகவும் தமிழ் சட்டத்தரணி ஒருவர் அரிசி, சீனி பிஸ்கட் போன்ற வற்றை வழங்கினார் என்றும் சிங்கள மக்கள் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் குடியேற வந்துள்ள சிங்கள மக்களுக்கு மாநகர சபையினால் குடிதண்ணீர், மலசலகூட வசதிகள், மின்சார வசதிகள் என்பன ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
Average Rating