இலங்கை, புலிகளுக்கு நார்வே முக்கிய கேள்வி
அமைதிக் கண்காணிப்புக் குழுவினரின் பாதுகாப்பு தொடர்பாக இலங்கை அரசுடன் பேச விடுதலைப் புலிகள் மறுத்துவிட்டனர். மேலும் தங்களை தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்த்த ஐரோப்பிய நாடுகளை அமைதிக் கண்காணிப்புக் குழுவில் இருந்து விலகுமாறும் புலிகள் கூறியுள்ளனர். ஓஸ்லோவில் புலிகள், இலங்கை அரசுத் தரப்பு ஆகியோருடன் நார்வே நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது தங்களது இந்தக் கோரிக்கையை புலிகள் தெரிவித்தனர்.
அமைதிக் கண்காணிப்புக் குழுவினரின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக இலங்கை அரசுடன் நேரடியாகப் பேச்சு நடத்துமாறு நார்வே தெரிவித்த யோசனையை புலிகள் நிராகரித்துவிட்டனர்.
ஐரோப்பிய நாடுகளின் பார்வையாளர்கள் கண்காணிப்புக் குழுவில் இருந்து விலக்கப்பட்டால் நார்வே, ஐஸ்லாந்து ஆகிய நாட்டு பார்வையாளர்கள் மட்டுமே மிஞ்சியிருப்பர். இவர்களால் போர் நிறுத்த ஒப்பந்த அமலாக்கத்தை முழுமையாக கண்காணிக்க முடியாது என்று நார்வே கூறியுள்ளது.
சுவீடன், டென்மார்க், பின்லாந்து ஆகிய ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 37 பார்வையாளர்கள் இப்போது அமைதிக் கண்காணிப்புப் பணியில் உள்ளது. இந்தக் குழுவுக்கு சுவீடனைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் உல்ப் ஹென்ரிக்சன் தான் தலைவராக உள்ளார். புலிகளின் கோரிக்கையின்படி ஐரோப்பிய நாடுகள் விலக்கப்பட்டால், ஹென்ரிக்ஸனையும் நீக்கியாக வேண்டும்.
ஐரோப்பிய யூனியனைச் சாராத பிற புதிய பார்வையாளர்களை நியமிக்க 6 மாதமாவது ஆகும் என நார்வே புலிகளிடம் தெரிவித்துவிட்டது.
இதற்கிடையே, போர் நிறுத்த ஒப்பந்தத்தில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பி இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவுக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் நார்வே தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ளது.
மேலும் நார்வே தலைமையிலான அமைதி கண்காணிப்புக் குழு தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களா?, இந்தக் குழுவினருக்கு நீங்கள் பாதுகாப்பு உத்தரவாதம் தர முடியுமா? அமைதி கண்காணிப்புக் குழுவில் பிற நாடுகள் பங்கேற்கும் வகையில் ஒப்பந்ததில் திருத்தம் செய்யத் தயாரா என்றும் இந்தக் கடிதத்தில் நார்வே கேள்விகள் எழுப்பியுள்ளது.