ராமர் கோவிலுக்கு 1 இலட்சம் நன்கொடை வழங்கிய பிச்சைக்கார பாட்டி!
இந்தியாவில் கோவில் கட்டுவதற்காக பிச்சைகார பாட்டி ஒருவர் 1 இலட்சம் ரூபா நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த விடயம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேயிலிருந்து 75 கி.மீ தூரத்தில் இருக்கும் பிம்பள்கான் என்ற கிராமத்தில் ராமர் கோவில் கட்ட கிராம மக்கள் தீர்மானித்தனர். இதற்கு நிதி திரட்டி வந்த ஊர் மக்களிடம் அதே கிராமத்தை சேர்ந்த 85 வயது மூதாட்டியான லட்சுமி என்பவர் தான் பிச்சை பெற்று சேமித்த 1 இலட்ச ரூபாயை நன்கொடையாக அளித்து கிராம மக்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விட்டார். நன்கொடை வழங்கிய லட்சுமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கோவிலில் அவரது பெயருடன் பெரிய பலகை வைக்கவும், கடைசி வரை அவரை கவனித்துக்கொள்ளவும் கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். லட்சுமி தான் 15 வருடங்களாக பிச்சையாக பெற்ற பணத்தை வங்கியில் சேமித்து வந்துள்ளார் என்பதும், அப்பணத்திலிருந்து தான் நன்கொடையை வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Average Rating