ஈரானுக்கு மிரட்டல் அறிக்கை: ரஷியா, சீனா நிராகரிப்பு
அணுசக்தி திட்டங்களைக் கைவிடும்படி ஈரானுக்கு மிரட்டல் விடுக்கும் கூட்டறிக்கையில் கையெழுத்திட ரஷ்யாவும் சீனாவும் மறுத்து விட்டன. ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா கூறிவருகிறது. ஈரானை பயங்கரவாத நாடு என சித்தரிக்க அது முற்சி செய்வதாக பல்வேறு நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. வியாழக்கிழமை சர்வதேச அணுசக்தி கமிஷனில் ஈரான் விவகாரம் குறித்து விவாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்தும்படி ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் கூட்டறிக்கையை வெளியிட அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் விரும்பின. ஆனால் அத்தகைய அறிக்கையில் கையெழுத்திட ரஷ்யாவும் சீனாவும் மறுத்துவிட்டன.
இதையடுத்து ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் மட்டும் இணைந்து அறிக்கை வெளியிட முடிவு செய்துள்ளதாக ஐரோப்பிய யூனியனின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதுபோல ஈரான் தொடர்பாக மற்ற மூன்று நாடுகளும் தங்கள் விருப்பப்படி அறிக்கை வெளியிடலாம் எனவும் அவர் கூறினார்.
சமீபத்தில் வியன்னாவில் இந்த ஆறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. யுரேனியம் செறிவூட்டலை நிறுத்தினால் வர்த்தகம், தொழில்நுட்பத் துறைகளில் சலுகைகள் வழங்கப்படும் என அப்போது அறிவிக்கப்பட்டது. சலுகைகள் அடங்கிய பட்டியலை ஈரான் பரிசீலித்து வருவதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகம் கூறியிருக்கிறது.
இதனிடையே ஈரானை நிர்ப்பந்திக்கும் வகையில் மிரட்டல் அறிக்கை வெளியிடும் முயற்சிக்கு ரஷ்யாவும் சீனாவும் மறுத்துள்ளன.