போலீஸ் வாகனத்தைச் சேதப்படுத்தியதால் மூன்று ஆடுகள் கைது!!
போலீஸ் ரோந்து வாகனத்தை சேதப்படுத்திய, மூன்று ஆடுகளை பிடித்து, கால்நடை துயர் தடுப்பு கழகத்தில், சென்னை கீழ்ப்பாக்கம் போலீசார் ஒப்படைத்தனர்.
சென்னை, கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர், கணேஷ் பாபு. கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில், ரோந்து வாகன ஓட்டுனராக உள்ளார்.
இவர், போலீசிற்கு புதியதாக வழங்கப்பட்டுள்ள, இன்னோவா ரோந்து வாகனத்தை (டி.என்.01 ஜி 5671), குடியிருப்பில் விட்டு விட்டு, வீட்டிற்கு செல்வார்.
கீழ்ப்பாக்கம், சாஸ்திரி நகரைச் சேர்ந்த ஆரோக்கிய நாதன் என்பவர் மனைவி மேரி, 37, என்பவர், வளர்த்து வரும் மூன்று ஆடுகள், அடிக்கடி இந்த குடியிருப்பிற்குள் நுழைந்து, வாகனங்களில் ஏறி ஆட்டம் போடுவது வழக்கம்.
போலீசின் புதிய வாகனத்திலும், ஆடுகள் ஏறியதில், வாகனத்தின் சில பகுதிகள் சேதமடைந்தன. தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் போலீசில், கணேஷ் பாபு, புகார் அளித்தார்.
புகாரை அடுத்து, நேற்று காலை மேய வந்த, மூன்று ஆடுகளும், பிடிக்கப்பட்டு (கைது!), வேப்பேரியில், உள்ள கால்நடை துயர் தடுப்பு கழகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Average Rating