வாக்காளர் விவரம் எதனையும் படைகளுக்கு வழங்க வேண்டாம்; முல்லைத்தீவு தேர்தல் ஆணையாளர்..!!
வாக்காளர் தொடர்பான எந்த வொரு விவரங்களையும் கிராம அலுவலர்கள் படையினருக்கு வழங்க வேண்டாம். விவரங்களை வழங்குமாறு படையினர் நிர்ப்பந்தித்தால் அது தொடர்பில் எனக்கு அறிவியுங்கள் அல்லது அவர்களை என்னுடன் பேசச் சொல்லுங்கள் என்று
முல்லைத்தீவு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் நாலக்கரத் நாயக்க கிராம அலுவலர்களுக்குப் பணித்துள்ளார்.
முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கிராம அலுவலர்களுக்கான கலந்துரையாடலின் போதே உதவித் தேர்தல் ஆணையாளர் இவ்வாறு பணித்துள்ளார்.
தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் கலந்துரையாடல் ஒன்று கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் கிராம அலுவலர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
கரைதுறைப்பற்றில் கிராம அலுவலர்களிடம் செல்லும் படையினர் அப்பகுதி வாக்காளர் எண்ணிக்கை, அவர்களின் குடும்ப விவரம் உள்ளிட்ட தகவல்களை வழங்குமாறு நிர்ப்பந்திப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் ‘கபே’ அமைப்பினால் தேர்தல் திணைக்களத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
படையினர் கிராம அலுவலர்களை நிர்ப்பந்திப்பதால் அவர்கள் வாக்காளர் தொடர்பான விவரங்களை வழங்க வேண்டிய கட்டாய நிலைக்கு உள்ளாகிவுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து நேற்றுமுன்தினம் நடந்த கலந்துரையாடலின் போது, அவ்வாறான விவரங்களை எதனையும் கிராம அலுவலர்கள் படையினருக்கு வழங்க வேண்டாம் என்றும் அப்படி ஏதாவது சம்பவம் நடந்தால் அதுகுறித்து தனக்கு அறிவிக்குமாறும் உதவித் தேர்தல் ஆணையாளர் பணித்துள்ளார்.
Average Rating