புலிகளின் இராணுவத்தை ஒப்புக்கொள்ள முடியாது: நோர்வே, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிறிலங்கா கடிதம்
புலிகளின் இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படையை ஏற்கவோ சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையிலான உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்கோ சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் முன்வராது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் பெனிடா வோல்டினருக்கும் நோர்வே பிரதமர் ஜோன் ஸ்டோல்டன்பேர்க்கிற்கும் சிறிலங்கா அரசாங்கம் எழுத்து மூலம் தெரிவித்துள்ளது. அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தனியான அரசாங்கத்தை அமைக்க புலிகள் திட்டமிடுவது அவர்களின் 7 விடயங்களைக் கொண்ட 6 பக்க ஒஸ்லோ அறிக்கையில் உறுதியாகிறது.
ஜனநாயக அரசாங்கம் என்ற வகையில் விடுதலைப்புலிகளின் ஜனநாயக விரோத போக்கிற்கு அரசாங்கத்தினால் இணங்க முடியாது. சிறிலங்கா பாதுகாப்புப் படைக்கு சமமாக தனது படைப்பலத்தையும் கட்டியெழுப்ப விடுதலைப் புலிகள் விடுக்கும் கோரிக்கைக்கு ஜனநாயக அரசு என்கிற வகையில் எவ்வாறு இணங்க முடியும்? என்று அக்கடிதத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்கவுள்ள பின்லாந்திற்கும் அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டினை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விளக்கவுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு தனியான அரசாங்கம் இல்லாததால் அதற்கு இராஜதந்திர தகுதி வழங்குவதற்கான எந்தவொரு நடவடிக்கைக்கும் சிறிலங்கா அரசாங்கம் உடன்படாது என்று நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்முக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.