புலிகளின் தலைவர் பிரபாகரன், எம்.ஜி.ஆருக்கு கொடுத்த துப்பாக்கியை தயாரித்தவர் மரணம்!

Read Time:24 Minute, 42 Second

0147-71980களில் நடைபெற்ற ஒரு சம்பவம். அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களை சந்திக்க விரும்பம் தெரிவித்தார். அதையடுத்து புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் ராமாவாரம் தோட்டம் சென்று எம்.ஜி.ஆரை சந்தித்தார். விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றி பேசிக்கொண்டு இருந்தபோது, ஆயுதங்கள் வாங்குவதற்கு பணப் பற்றாக்குறை இருப்பதை தெரிந்து கொண்டார் எம்.ஜி.ஆர்.

சந்திப்பு முடிந்து ஆன்டன் பாலசிங்கம் திரும்பியபோது, புலிகள் இயக்கம் கனவில்கூட நினைக்காத அளவில் பணத்தை கொடுத்து அனுப்பினார். போலீஸ் காவலுடன் சென்னையில் இருந்த விடுதலைப்புலிகள் பிரபாகரனின் வீட்டுக்கு பெட்டிகளில் கொண்டுசெல்லப்பட்ட அந்த பணத்தை எண்ணி முடிக்கவே, வீட்டில் இருந்தவர்களுக்கு ஒரு இரவு முழுவதும் தேவைப்பட்டது.

அந்தப் பணத்தில் விடுதலைப் புலிகளின் முதலாவது பெரிய தொகை ஆயுதங்கள் வாங்கப்பட்டன. இந்த உதவிக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்க விரும்பிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், எம்.ஜி.ஆரை சந்தித்தார். அப்போது, ஞாபகப் பரிசாக ஒரு ஏ.கே.47 ரக துப்பாக்கியை எம்.ஜி.ஆரிடம் கொடுத்தார் பிரபாகரன்.

எம்.ஜி.ஆரின் இறுதிக் காலம்வரை, அந்த துப்பாக்கி எம்.ஜி.ஆரிடம் இருந்தது. அதன்பின் என்னவாயிற்று என்று தெரியவில்லை.


இப்போது, எம்.ஜி.ஆரும் இல்லை. ஆன்டன் பாலசிங்கமும் இல்லை. பிரபாகரனும் இல்லை. அப்படியானால், இந்த சம்பவத்தை எதற்காக சொல்கிறோம்?

மேலே குறிப்பிட்ட சம்பவத்தில் ஒரு துப்பாக்கி வருகிறது அல்லவா? Avtomat Kalashnikov-47 அல்லது, சுருக்கமாக ஏ.கே.47 என்று உலகம் முழுவதும் அறியப்பட்ட அந்த துப்பாக்கியை உருவாக்கிய மிக்ஹைல் கலாஷ்நிகோவ், நேற்று முன்தினம் (திங்கட்கிழமை)  ரஷ்யாவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 94.

‘உலகம் முழுவதும் அறியப்பட்ட துப்பாக்கி’ என்று குறிப்பிட்டோம் அல்லவா? அது வெறும் சம்பிரதாயத்துக்காக சொல்லப்பட்டதல்ல. நிஜமாகவே, ஆயுதங்களில் உலகப் புகழ்பெற்ற, உலகம் முழுவதும் அறியப்பட்ட துப்பாக்கி இதுதான் என்பது உங்களுக்கு தெரியுமா?

இன்றைய தேதியில் உலகம் முழுவதிலும் 100 மில்லியன் ஏ.கே.-47 துப்பாக்கிகள் பாவனையில் உள்ளன. தீவிரவாத அமைப்புகள் தொடக்கம், உலக நாடுகளின் ராணுவம் வரை ‘விருப்பத்துக்குரிய’ ஆயுதம், இந்த ஏ.கே.-47 துப்பாக்கிதான். இது ஒரு வெறும் துப்பாக்கி என நீங்கள் நினைத்திருந்தால், இந்தக் கட்டுரையை படித்தபின் உங்கள் நினைப்பை மாற்றிக் கொள்வீர்கள். கட்டுரையில் ஏ.கே.-47 துப்பாக்கியுடன் தொடர்புள்ள 20 விஷயங்களையும், 20 போட்டோக்களையும் தருகிறோம்.

அட, இதற்குப் பின் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என ஆச்சரியப்பட சான்ஸ் உள்ளது.

1) மிக்ஹைல் கலாஷ்நிகோவ், 2-ம் உலக யுத்தத்தின்போது ரஷ்ய ராணுவத்தில் டாங்கி கமாண்டராக இருந்தவர். 1942-ம் ஆண்டு பிரையன்ஸ்க் என்ற இடத்தில் நடந்த யுத்தத்தில் இவரது தோளில் காயம் ஏற்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அதே வைத்தியசாலையில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த மற்றைய ராணுவ வீரர்கள், தாம் யுத்தம் புரிந்தபோது உபயோகித்த ரஷ்ய துப்பாக்கிகள் சரியாக இயங்குவதில்லை என அடிக்கடி பேசிக்கொள்வதை கேட்க நேர்ந்தது.

தாமே ஒரு துப்பாக்கியை ஏன் டிசைன் பண்ணக்கூடாது என்று மிக்ஹைல் கலாஷ்நிகோவ்க்கு தோன்றியது. அந்த ஐடியாவுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியே வந்து டிசைன் பண்ணிய துப்பாக்கிதான், ஏ.கே.-47.

1 -வது போட்டோ, ஏ.கே.-47 துப்பாக்கியை இளவயது மிக்ஹைல் கலாஷ்நிகோவ் டிசைன் செய்தபோது எடுக்கப்பட்டது. (ஆயுத விவகாரம் இது என்பதால், போட்டோ உள்ள பக்கங்களில் உள்ள ஆங்கில கட்டுரை, ஏ.கே.-47 பற்றியது அல்ல. காரணம், ஆயுதங்கள் பற்றி எழுதினால், சில நாடுகளில் இணையத்தை தடை செய்துவிட சான்ஸ் உள்ளது.)

2) முதலாவது ஏ.கே.-47 துப்பாக்கி 1947-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. 1949-ம் ஆண்டில் இருந்து, ரஷ்ய ராணுவத்தின் பிரதான துப்பாக்கியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ராணுவம் மட்டுமல்ல, 1970களில் இருந்து விடுதலை இயக்கங்களும், தமது பிரதான ஆயுதமாக ஏ.கே.-47 துப்பாக்கியையே பயன்படுத்த தொடங்கினர்.

2-வது போட்டோ, இலங்கையில் 1980களின் நடுப்பகுதியில், தமிழீழ விடுதலை இயக்க (டெலோ) போராளிகள், இலங்கை ராணுவத்துக்கு எதிரான தாக்குதல் ஒன்றை நடத்த ஏ.கே.-47 துப்பாக்கிகளுடன் வேனில் செல்லும் காட்சி. இதில் யாராவது இப்போது உயிருடன் இருக்கிறார்களா, தெரியவில்லை.

3) ஏ.கே.-47 துப்பாக்கியின் குறைந்த தயாரிப்பு செலவு, இலகுவில் பழுது பார்க்கும் வசதி ஆகியவை ஒரு பக்கமாக இந்த துப்பாக்கியை பிரபலமாக்கின. மற்றொரு பக்கமாக, இதன் பிளஸ் பாயின்ட், உலகின் எந்த பகுதியிலும், எந்த காலநிலையிலும் ஜாம் ஆகாது சுடக்கூடிய துப்பாக்கி இது என்பதால், அனைவராலும் விரும்பப்பட்டது.

அமெரிக்க தயாரிப்பு துப்பாக்கிகள் பாலைவன மணலிலும், கடும் மழையின்போதும், ஜாம் ஆகிவிடும் என்ற நிலையில் இருக்க, ஆப்கானிஸ்தான் ‘கிராம பாதுகாப்பு படையில்’ உள்ள பெண்களே ஏ.கே.-47 துப்பாக்கிகளுடன் நிற்பதை 3-வது போட்டோவில் பாருங்கள்.

4) ரஷ்யாவின் டாப் கூடைப்பந்து விளையாட்டு வீரரின் பெயர், அன்ட்ரே கிரிலென்கோ. சரி இவருக்கும் ஏ.கே.-47 துப்பாக்கிக்கும் என்ன தொடர்பு? கூடைப்பந்த விளையாட வரும்போது துப்பாக்கியுடன் வருவாரா? சேச்சே அதல்ல.

இவர் பிறந்த நகரத்தின் பெயர், துப்பாக்கி இஸ்கவ்ஸ்க். இந்த நகரத்தில்தான், ஏ.கே.-47 துப்பாக்கி தொழிற்சாலை உள்ளது. கூடைப்பந்து விளையாட்டில் இவரது இலக்கம் 47. இந்த இரண்டையும் சேர்ந்து இவருக்கு கிடைத்த பட்டப்பெயர், ஏ.கே.-47. ரஷ்ய விளையாட்டு ரசிகர்கள், “இதோ, ஏ.கே.-47 கையில் பந்து கிடைத்து விட்டது” என உற்சாக கூச்சல் எழுப்ப, 47-ம் இலக்கம் பொறிக்கப்பட்ட உடையுடன் ‘ஏ.கே.-47’ அன்ட்ரே கிரிலென்கோவை 4-வது போட்டோவில் பாருங்கள்.

5) கொலம்பியா நாட்டைச் சேர்ந்த இசைக் கலைஞர் சீசர் லோபஸ் சுமார் ஒரு டஜன் ஏ.கே.47 துப்பாக்கிகளை வாங்கி, அவற்றை கிடார் வாத்தியமாக மாற்றினார் (யுத்தம் கூடாது என்பதை சிம்பாலிக்காக காட்டுவதற்கு). 2007-ம் ஆண்டு ஐ.நா. பொதுச்செயலாளராக இருந்த கோபி அனனை சந்தித்த சீசர் லோபஸ் ஏ.கே.-47 கிடாரை பரிசாக கொடுத்தபோது எடுத்ததுதான், 5-வது போட்டோ.

6) பெலாரஸ் நாட்டில் மேல்நிலைப் பள்ளி வகுப்பறைகளுக்குள் ஆசிரியர்களால் எடுத்துச் செல்லப்படும் துப்பாக்கி, ஏ.கே.-47தான்! காரணம், அங்கு மேல்நிலைப் பள்ளியில், ராணுவ பாடம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதில் செய்முறைப் பயிற்சியாக ஏ.கே.-47 துப்பாக்கியை இயக்குதல் மற்றும், கழட்டிப் பூட்டும் பயிற்சிகளுக்கு நிஜ ஏ.கே.-47 துப்பாக்கிகளை பயன்படுத்துவதை 6-வது போட்டோவில் பாருங்கள்.

7) உலகப் புகழ் பெற்ற ஏ.கே.-47 துப்பாக்கி படம் பொறிக்கப்பட்ட நாணயம் ரஷ்யாவில் வெளியிடப்படுவது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால், சமாதானத்தை விரும்பும் நியூசிலாந்து நாடு, 2 டாலர் நாணயம் ஒன்றில் ஏ.கே.-47 துப்பாக்கியின் படம் பொறித்து வெளியிட்டது. இந்த துப்பாக்கி தயாரிக்கப்பட்டு 60 ஆண்டுகள் பூர்த்தியானதை அடுத்து, இந்த நாணயம் வெளியிடப்பட்டது.

குவாத்தமாலா நாட்டின் தேசிய புரட்சிப் படை (URNG) பெண் போராளி ஒருவர் 1997-ம் ஆண்டு ஏ.கே.-47 துப்பாக்கியில் பொருத்தப்பட்ட பூங்கொத்துடன் வருவதை, 7-வது போட்டோவில் பார்க்கவும். ஒருவேளை வாலன்டைன்ஸ் டே பரிசாக யாருக்கோ பூங்கொத்து கொடுக்க துப்பாக்கியுடன் வருகிறாரோ!

8) ஏ.கே.-47 துப்பாக்கியை, தேசியக் கொடியில் வைத்திருக்கும் நாடு எது தெரியுமா? மொசாம்பிக். இவர்களது தேசியக் கொடியில் ஏ.கே.-47 படம் இருப்பதை 8-வது போட்டோவில் பார்க்கவும். அதேபோல லெபனானின் ஹிஸ்பொல்லா இயக்கத்தின் கொடியிலும் ஏ.கே.-47 துப்பாக்கி உள்ளது

9) ஏ.கே.-47 துப்பாக்கியின் பெயர், கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. உலக அளவில் அதிக எண்ணிக்கையில் (100 மில்லியன்) பயன்பாட்டில் உள்ள துப்பாக்கி என கின்னஸ் பதிவு சொல்கிறது. 9-வது படத்தில் ஏ.கே.-47 எப்படி உபயோகிக்கப்படுகிறது பாருங்கள்.

போட்டோவில் உள்ளது, பாலஸ்தீன போலீஸ் படையில் ஆட்களை சேர்க்கும்போது வைக்கப்படும் ஒரு டெஸ்ட். அதாவது, ஏ.கே.-47 துப்பாக்கியால் சடசடவென்று மண்ணில் சுடுவார்கள். போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்த நபர் ‘டைவ்’ அடித்து தப்பிக்க வேண்டும். அடேங்கப்பா.. நம்ம மருதை ஏட்டையா இப்படி அடிப்பாரா டைவ்?

ltte.piraba-00310) உலகில் 106 நாடுகளைச் சேர்ந்த ராணுவம், மற்றும் அதிரடிப் படையினர், ஏ.கே.-47 துப்பாக்கிகளை தற்போது உபயோகிக்கின்றனர். அதைவிட அதிக எண்ணிக்கையில் அந்த ராணுவத்துடன் யுத்தம் புரியும் விடுதலை இயக்கங்களும் இதே துப்பாக்கியை உபயோகிக்கின்றனர். 1980-ம் ஆண்டு ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், ஏ.கே.-47 ஏந்திய பாதுகாவலுடன் இருப்பதை 10-வது போட்டோவில் பார்க்கவும்.

11) ரஷ்ய துப்பாக்கி என அறியப்பட்ட ஏ.கே.-47, ரஷ்யாவில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. சுமார் 30 நாடுகளில் ஏ.கே.-47 துப்பாக்கிகளை தயாரிக்க லைசென்ஸ் கொடுத்துள்ளது ரஷ்யா. அப்படி லைசென்ஸ் பெற்று ஏ.கே.-47 துப்பாக்கிகளை தயாரிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா என்பது உங்களுக்கு தெரியுமா?

Mikhail Kalashnikov poses for a picture with a AK-47

பாக்தாத் பல்கலைக்கழக மாணவர்களையும், மாணவிகளையும் துப்பாக்கி பயிற்சிக்கு வாருங்கள் என 1998-ம் ஆண்டு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களுக்கு பயிற்சி கொடுக்க உபயோகிக்கப்பட்ட துப்பாக்கிகள், ஏ.கே.-47தான். 11 -வது போட்டோவில், பாக்தாத் பல்களைக்கழக மாணவி ஒருவர் ஏ.கே.-47 துப்பாக்கியை ஹான்டில் பண்ணுவதை பாருங்கள்.

12) கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி, இத்தாலியின் ஜியோயா டோரோ துறைமுகத்துக்கு வந்த கப்பலில் இருந்த கன்டெயினர் ஒன்றை கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதற்குள் 8,000 ஏ.கே.-47 துப்பாக்கிகள் இருந்தன. அப்போது எடுக்கப்பட்ட போட்டோதான், 12-வது போட்டோவாக இணைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு அதிக எண்ணிக்கையில் ஒரே ரக ஆயுதங்கள் (பெறுமதி 6 மில்லியன் யூரோ) இதுவரை பிடிபட்டதில்லை.

சரி. அந்தக் கப்பலில் ஆயுதங்கள் எங்கே போக இருந்தன? ரோமானியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற கப்பல் அது! அடப் பாவிகளா!

13 ) ஏ.கே.-47, தயாரிப்பு செலவு குறைந்த துப்பாக்கி என குறிப்பிட்டு இருந்தோம். இன்றைக்கு ஆயுத சந்தையில் இந்த துப்பாக்கியின் விலை என்ன தெரியுமா? ஒரு துப்பாக்கி சராசரியாக 540 டாலர்! மற்றொரு விஷயம், சில ஆபிரிக்க நாடுகளில் இருந்து கடத்தப்பட்டு, ஆயுத கறுப்பு சந்தையில் இதே துப்பாக்கி 200 டாலர் குறைவாக விற்பனையாகிறது.

இவ்வளவு மலிவாக உள்ளதால், மொன்ரோவியா டவுன்டவுனில் நடந்த ஒரு வீதிச் சண்டையிலும் ஏ.கே.-47 துப்பாக்கி உபயோகிக்கப்படுவதை, 13-வது போட்டோவில் பாருங்களேன்.

14 ) அதிர்ச்சியான ஒரு விஷயம் தெரியுமா? உலக அளவில் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில், மிக அதிக எண்ணிக்கையானவர்கள் ஏ.கே.-47 துப்பாக்கியில் இருந்து வந்த ரவையால்தான் உயிரிழந்துள்ளனர். ஆம். ஆட்டிலரி தாக்குதல், விமான தாக்குதல் மற்றும் ராக்கெட் தாக்குதல்களில் இறந்தவர்களின் மொத்த கூட்டுத்தொகையைவிட, ஏ.கே.47 துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்!

இன்றுகூட ஆண்டுக்கு சுமார் கால் மில்லியன் பேர் ஏ.கே.-47 துப்பாக்கியால் கொல்லப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்கிறது புள்ளிவிபரம். 14-வது போட்டோவில், இந்தோனேசியா காட்டுக்குள் ஏ.கே.-47 துப்பாக்கியுடன் பயிற்சி எடுப்பவர்களின் வயதைப் பாருங்கள்! 1999-ம் ஆண்டு எடுக்கப்பட்ட போட்டோ அது.

15) அமெரிக்க அதிரடிப் படையால் கொல்லப்பட்ட அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன், தமது வீடியோ பேட்டிகள் அனைத்திலும் தமக்கு அருகே ஏ.கே.-47 துப்பாக்கி இடம்பெறுமாறு பார்த்துக் கொண்டார் என்பதை 15-வது போட்டோவில் பார்க்கவும். காரணம், அவர் முதல் முதலில் இயக்கிய எந்திரத் துப்பாக்கி, ஏ.கே.-47 என்ற அபிமானத்தால்!

ஆமா.. பின்-லேடனுக்கு முதல் முதலில் ஏ.கே.-47 துப்பாக்கியை கொடுத்தது யார்? சாட்சாத், அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.தான்!

ஆப்கானிஸ்தானில் ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக போர் புரிய அல்-காய்தாவுக்கு ஏ.கே.-47 ரக துப்பாக்கிகளை முதலில் கொடுத்தது சி.ஐ.ஏ.தான். பாகிஸ்தான் உளவுத்துறை மூலம் அந்த துப்பாக்கிகள் ஆப்கானிஸ்தானுக்குள் சென்றன!

16) வியட்நாம் யுத்தத்தில் நடந்த ஒரு தமாஷ் தெரியுமா? அநேக அமெரிக்க ராணுவ வீரர்கள், தமது (அமெரிக்க தயாரிப்பு) M16 எந்திரத் துப்பாக்கிகளை, (ரஷ்ய தயாரிப்பு) ஏ.கே.-47 துப்பாக்கிகளுக்கு மாற்றீடு செய்து கொண்டார்கள்.

யுத்தத்தில் வியட்நாமியர்களை சுட்டு வீழ்த்தியபோது, தமது M16 துப்பாக்கிகளை வீசிவிட்டு, உயிரிழந்த வியட்நாமியர்களின் உடலில் இருந்த ஏ.கே.-47 துப்பாக்கிகளை எடுத்து பயன்படுத்தினார்கள். காரணம், வியட்நாமிய காலநிலையில் அமெரிக்க துப்பாக்கிகள் அடிக்கடி ஜாம் ஆகின. ஏ.கே.-47 துப்பாக்கிகள் துல்லியமாக இயங்கின.

16-வது போட்டோவில் ஏ.கே.-47 துப்பாக்கிகளுடன் இருப்பது, நிக்கரகுவா நாட்டு அதிரடிப்படை. “COE” (Centro de Operaciones Especiales) என்ற பெயருடடைய இந்த அதிரடிப் படையினரின் தனித் திறமை என்ன தெரியுமா? சகதிகளுக்குள் விழுந்து புரண்டு சண்டையிடுவது. சகதிக்குள் விழுந்தாலும், அற்புதமாக இயங்கும் துப்பாக்கிகள் ஏ.கே.-47 என்கிறார்கள் இவர்கள்.

17) ரஷ்யாவில் பிரபலமான ஒன்று ஏ.கே.-47 துப்பாக்கி என்றால், மற்றொரு பிரபலமான விஷயம் என்ன தெரியுமல்லவா? ஆம். வாட்கா மதுபானம். இந்த வாட்கா மதுபானத்தை பயன்படுத்தி செய்யும் காக்டெயில் ஒன்றின் பெயர், ஏ.கே.-47ன் பெயர்தான்!

‘Kalashnikov shot’ எனப்படும் அந்த காக்டெயில், வாட்கா, அப்சிந்த், கறுவா, சர்க்கரை ஆகியவற்றின் கலவை. ரஷ்யா போகும்போது டேஸ்ட் பண்ணி பார்க்கவும். ஜாக்கிரதை… அடித்தால், ஆளை வீழ்த்திவிடும்! 17-வது ‘அதிர்ச்சி’ போட்டோவில், ஈராக்கிய பாதுகாப்பு படையினரின் கையில் உள்ள ஏ.கே.-47 துப்பாக்கி எந்த நிமிடமும் வெடிக்க போகிறது. அதில் இருந்து வெளியாகப்போகும் ரவைக்கு உயிரைவிட தயாராக உள்ளவர், அல்-காய்தா சந்தேக நபர் ஒருவர்.

18) ஈராக்கில் அமெரிக்கப் படைகள் சதாம் ஹூசேனின் மாளிகையை கைப்பற்றியபோது, அங்கிருந்தது எடுக்கப்பட்ட ஆயுதங்களில் ஒன்று, ஏ.கே.-47 துப்பாக்கி. அதில் அப்படியென்ன விசேஷம்? முழுமையாக தங்கத்தால் முலாம் பூசப்பட்டிருந்த துப்பாக்கி அது! 18-வது போட்டோவும் ‘அதிர்ச்சி’ போட்டோதான்.

தாய்லாந்தின் யாலா மாகாண காட்டுக்குள் சுட்டு வீழ்த்தப்பட்ட தீவிரவாதி ஒருவரின் போட்டோ அது. உயிரிழந்த நிலையிலும், தனது ஏ.கே.-47 துப்பாக்கியை விடாமல் பற்றியிருப்பதை பாருங்கள்.

19) இலங்கையில் யுத்தம் முடிந்தபின், இறுதி யுத்தம் பற்றிய விபரங்களுக்காக சில ராணுவ தளபதிகளை சந்தித்து பேட்டியெடுக்க வேண்டியிருந்தது. அப்போது இலங்கை ராணுவத்தின் பெரிய தளபதிகளில் ஒருவர், விடுதலைப்புலிகள் பற்றி தெரிவித்த ஒரு விஷயம், “புலிகள் இயக்கத்தில் இரு திறமைசாலியான தளபதிகள் இருந்தார்கள். இருவரும் உயிரிழந்ததுதான் சோகம். அவர்கள் எமது ராணுவத்தில் இருந்திருந்தால், நாம் எப்போதோ யுத்தத்தை முடித்திருப்போம்”

அவர் குறிப்பிட்ட இரு தளபதிகளில் ஒருவர், பால்ராஜ் (மற்றையவர் தீபன்). 19-வது போட்டோ, புலிகள் ராணுவ முகாம் ஒன்றை தாக்க சென்றபோது எடுக்கப்பட்டது. அதில், தண்ணீரைத் தாண்டி பால்ராஜ் செல்லும்போது, அவருக்கு பின்னால் உள்ள போராளி உயர்த்தி பிடித்துள்ள துப்பாக்கி, ஏ.கே.-47!

10131225-2020) ஏ.கே.-47 துப்பாக்கியை உருவாக்கிய மிக்ஹைல் கலாஷ்நிகோவ், அந்த துப்பாக்கி மில்லியன் கணக்கானவர்களின் உயிர்களை எடுத்தது குறித்து என்ன சொன்னார்?

1997-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி அவர் கலந்துகொண்ட துப்பாக்கி கண்காட்சி ஒன்றில் பேசியபோது (அப்போது எடுக்கப்பட்ட போட்டோதான் 20-வது போட்டோ) “இது குறித்து நான் கவலைப்படவில்லை. மக்களை கொல்லும் பாவச்செயலை செய்வது அரசியல்வாதிகள்தான். துப்பாக்கியை வடிவமைத்த நான் அல்ல. நான் இப்போது படுத்தாலும், நிம்மதியாக தூங்க முடிகிறது. காரணம், அந்த பாவத்தின் சுமை, என் தலையில் இல்லை” என்றார்.

மிக்ஹைல் கலாஷ்நிகோவ், கடந்த திங்கட்கிழமை இறந்து போனார். ஆனால், அவர் உருவாக்கிய ஏ.கே.-47 துப்பாக்கி இன்னமும் பல ஆண்டுகளுக்கு வெடித்துக் கொண்டுதான் இருக்கப் போகிறது!

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொலிஸாருக்கு முன் நிர்வாணமாக நின்ற பெண்
Next post 24 மணிநேர விபத்துகளில் ஒருவர் பலி; 279 பேர் வைத்தியசாலையில் அனுமதி