வவுனியாவில் பழங்காலத்து நாணயங்கள் மீட்பு
வவுனியா தாண்டிக் குளத்தில் இருந்து கல்மடு வரையான வீதி தற்போது புனரமைப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் மருக்காரமபளை கிராம வீதிக்கு அருகாமையில் நீர் ஓடுவதற்கான கால்வாயை கனரக இயந்திரத்தின் மூலம் தோண்டியபோதே பழங்காலத்து நாணயங்கள் 120 இன்று மீட்கப்பட்டன.
மண் பானையொன்றில் காணப்பட்ட இந்நாணயங்கள் எக்காலத்துக்குரியவை என்பதனை அறிவதற்காக தொல்பொருள் திணைக்களத்திற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலாளர் பந்துல கரிச்சந்திர தெரிவித்தார்.
சுமார் இரண்டு அடி ஆழத்தில் காணப்பட்ட மண் பானையிலிருந்து இந்நாணயங்களில் சின்னங்கள் பொறிக்கப்பட்டு சேதமடையாத நிலையில் உள்ளன.
கனரக இயந்திரம் மூலம் கால்வாய் திருத்தம் செய்யப்பட்டு வருவதனால் இந்நாணயங்கள் வைக்கப்பட்டிருந்த பானை உடைந்து காணப்பட்டதுடன் அதனுள் இருந்த நாணயங்களும் சிதறிக்கிடந்தன.
இதேவேளை அங்கிருந்து அகற்றப்பட்ட மண் வேறோர் இடத்தில் கொட்டப்பட்டு வருவதனால் மேலதிக நாணயங்கள் மண்ணோடு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
வவுனியா மாவட்ட செயலாளர் பந்துல கரிச்சந்திர வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயகுமார் கிராமசேவகர் எஸ். உமாபதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரடி விஜயம் மேற்கொண்டனர்.
Average Rating