இந்திய வீட்டுத்திட்ட மோசடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
இந்திய வீட்டுத் திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டாத கிராம மக்கள் வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
வவுனியா மாவட்டத்தில் பயனாளிகள் தெரிவு இடம்பெற்று தற்போது 3ஆம் கட்ட வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டவுள்ள நிலையிலும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள்குடியேறிய கிராமங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படாது அமைச்சரொருவரின் சிபாரிசில் வீட்டுத்திட்டம் வழங்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டத்தில் பாதிக்கப்பட்ட கிராம மக்கள், வவுனியா தாதியர் பயிற்சிக் கல்லூரிக்கு முன்பாக ஒன்றுகூடிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
‘எமக்கு வீட்டுத்திட்டத்தை தா’, ‘அமைச்சரே! அதிகாரிகள் உனது கைக்கூலிகளா?’, ‘இந்திய அரசே! வீட்டுத்திட்டத்தை யாருக்கு வழங்கினாய்?’, ‘அமைச்சர் பாராபட்சம் காட்டுகின்றார்’, ‘ஜனாதிபதி செயலணியின் செயலாளரே நீர் அமைச்சருக்கு வக்காளத்து வாங்கதே’ என்ற வாசகங்களைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசங்களை எழுப்பிக்கொண்டு வவுனியா மாவட்ட செயலகம் வரை சென்றனர்.
நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் வீதியோரத்தில் நின்று சில மணி நேரம் கோசம் எழுப்பியதுடன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கான மகஜர் ஒன்றையும் வவுனியா அரசாங்க அதிபரிடம்; கையளித்துள்ளனர்.
இதன்போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வட மாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி. சிவமோகன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினாகளான க. பரமேஸ்வரன், எஸ்.பார்த்தீபன், பிரஜைகள் குழுவின் தலைவர் எஸ். தேவராஜா உட்பட மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
Average Rating