மேலுமொரு மனித புதைகுழி; மூங்கிலாற்றில் 9 எலும்புக் கூடுகள் மீட்பு
முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு, மூங்கிலாறு 200 வீட்டுத் திட்டத்தில் உள்ள வீடு ஒன்றின் வளவில் இருந்து நேற்று மேலும் 9 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
முல்லை மாவட்டம் உடையார் கட்டு மூங்கிலாறு 200 வீட்டுத்திட்டத்தில் உள்ள வீடு ஒன்றின் வளவை நேற்று முன்தினம் மாலை உழவு இயந்திரத்தைப் பயன்படுத்தி சமப்படுத்தும் போது பாய் ஒன்றில் சுற்றிய நிலையில் எச்சங்கள் உட்பட மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதனையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றத்திற்க்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டதுடன் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்றுபிற்பகல் முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதவான் பரஞ்சோதி, யாழ் மாவட்ட பதில் சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன், முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோர் முன்னிலையில் தோண்டியபோது 9 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் சிதைந்த நிலையிலான தேசிய அடையாள அட்டையொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் பெயர்விபரங்கள் தெளிவின்றி காணப்படுவதோடு அடையாள அட்டை தெளிவாக உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எனவே நேற்றுமாலை ஆட்பதிவு திணைக்களத்திற்கு மேலதிக தகவலை பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை, திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் மன்னார் புதைகுழியில் இருந்து இதுவரை 80 மனித எச்சங்கள் உட்பட எலும்புக் கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் திருகோணமலையில் ஒரு மனித எலும்புக் கூடு மீட்கப்பட்டுள்ளது எனவே இது வடக்கில் அண்மையில் தோண்டப்பட்ட மூன்றாவது மனித புதைகுழி என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating