கத்தாரில் சக தொழிலாளியை, இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற இந்தியர் கைது
வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் உள்ள ஒரு குளிர்சாதன இயந்திரங்கள் பழுது நீக்கும் நிறுவனத்தில் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ரிஸ்வானுல் ஹக்(26), கேரளாவை சேர்ந்த சாந்தி ஷியாம் கிருஷ்ணன் நாயர்(43) ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இவர்களுக்குள் திடீரென்று ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறும் சூழல் உருவானதைக் கண்ட இதர தொழிலாளர்கள், இருவரையும் சமரசம் செய்து பிரித்து அனுப்பினர்.
இருப்பினும், இச்சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட ஆவேசம் தணியாத கிருஷ்ணன் நாயர், அறையில் யாரும் இல்லாத போது, வீட்டின் மொட்டை மாடிக்கு சென்ற ரிஸ்வானை பின் தொடர்ந்து சென்றார்.
அவர் அசந்திருந்த நேரத்தில் மண்டையில் இரும்பு கம்பியால் பயங்கரமாக தாக்கினார். சம்பவ இடத்திலேயே ரிஸ்வான் துடிதுடித்து இறந்ததை கண்ட அவர் அந்த இடத்தில் இருந்து தப்பித் தலைமறைவானார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தலைமறைவான கிருஷ்ணன் நாயரை தேடி வந்தனர். அப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் பதுங்கியிருப்பதாக மறுநாள் வந்த தகவலையடுத்து, அந்த இடத்தை சுற்றிவளைத்து அவரை கைது செய்தனர்.
Average Rating