தந்தையின் வாள்வெட்டிற்கு இலக்காகி மகள் படுகாயம்
யாழ். மீசாலைப் பகுதியில் தந்தையின் வாள்வெட்டிற்கு இலக்காகி கோடீஸ்வரன் தர்மிகா (22) என்ற இளம்பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் சனிக்கிழமை (28) தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (27) இரவு இடம்பெற்றுள்ளது.
தந்தைக்கும் தாய்க்கும் இடையில் இடம்பெற்ற சண்டையினை நிறுத்தச் சென்ற மகளை தந்தை வாளால் வெட்டியதில் மகள் கையிலும், தலையிலும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதேவேளை, யாழ். மீசாலை வடக்கில் காணித் தகராறு காரணமாக சண்டையிட்டுக்கொண்ட இரண்டு வயோபதிபர்களை அவர்கள் இருவரின் மைத்துனன் தாக்கியதில் குறித்த இரு வயோதிபர்களும் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை (27) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் கணபதிப்பிள்ளை கந்தசாமி (61), கே.மயில்வாகனம் (55) ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த இரண்டு உறவுக்கார வயோதிபர்களும் காணித் தகராறு காரணமாக சண்டையிட்டுக் கொண்ட போது, அங்கு வந்த இருவரின் மைத்துனர், இருவர் மீதும் இரும்புக் கம்பியினால் தாக்கியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவை தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating