தர்மபுரியில் ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணிக்கு கத்திக்குத்து!!
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள அல்லியூர் பகுதியை சேர்ந்தவர் சாமி கண்ணு. இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது 30).
சாமிகண்ணு கட்டிட வேலைக்காக கோவை மாவட்டத்திற்கு சென்றுள்ளார். இவரது சகோதரர் குமார். இவர் படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார்.
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த தனது அண்ணி கோவிந்தம்மாளை ஆசைக்கு இணங்க வருமாறு அழைத்து அடிக்கடி குமார் தொந்தரவு கொடுத்து வந்தார்.
எப்படியாவது அவரை அடைந்து விடவேண்டும் என்று தீர்மானித்த வாலிபர் குமார் நேற்று இரவு வீட்டில் கோவிந்தம்மாள் தனியாக இருப்பதை கண்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு குமார் அவரது வீட்டுக்குள் நைசாக நுழைந்தார். அங்கு தனியாக இருந்த கோவிந்தம்மாளை பார்த்ததும் ஆசைக்கு இணங்க வருமாறு அவர் அழைத்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கோவிந்தம்மாள் வெளியே செல்லுமாறு கூறி சத்தம் போட்டார்.
உடனே குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோவிந்தம்மாளின் தலையில் ஓங்கி வெட்டினார். அப்போது அதனை கைகளால் தடுக்க முயன்றபோது அவரது கையையும் சரமாரியாக வெட்டினார்.
அவர் வலியால் அலறி துடித்தார். அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வீட்டுக்குள் சென்றனர். இதனை கண்டதும் குமார் கத்தியுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
ரத்தவெள்ளத்தில் தரையில் கிடந்த கோவிந்தம்மாளை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருந்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஊர் மக்கள் தகுந்த நேரத்தில் வந்ததால் தான் அவர் காப்பாற்றப்பட்டார்.
இது பற்றி கோயமுத்தூரில் கட்டிட வேலை செய்து வரும் அவரது கணவர் சாமிகண்ணுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
மேலும் இச்சம்பவம் குறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி உள்ள வாலிபர் குமாரை தேடி வருகிறார்கள்.
Average Rating