பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய மத்திய மந்திரியை காணவில்லை!!
மத்திய மந்திரியாக உள்ள நிகால்சந்த் மெக்வால் மூன்று வருடங்களுக்கு முன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இது குறித்து கடந்த ஜூன் மாதம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நிகால்சந்த் உள்பட 16 பேருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை நிகால்சந்திடம் தர பொலிசார் முயன்றதாகவும் அவர் டெல்லியில் இருப்பதால் தங்களால் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை எனவும் நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனால் டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிருபரின் கேள்விக்கு பதிலளித்த நிகால்சந்த் தனக்கு நீதிமன்றத்தில் இருந்து அனுப்பட்ட சம்மன் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு எழுப்பப்பட்டவுடன் மத்திய உரத்துறை மந்திரி பொறுப்பிலிருந்து, பஞ்சாயத்து ராஜ் பொறுப்புக்கு நிகால்சந்த் மாற்றப்பட்டாரே தவிர அவரை இதுவரை பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்யவில்லை. இந்நிலையில் இன்று அவர் தனது புதிய பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை, உரிய விசாரணை நடத்தாமல் புகாரை முடித்துக்கொண்டது. இதையடுத்தே அவர் நீதிமன்றத்தை அணுகினார். கடந்த ஆகஸ்ட் மாதம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிகால்சந்த் அவ்வாறு ஆஜராகவில்லை. அப்போது பொலிசார் நீதிமன்றத்தில் நிகால்சந்த் டெல்லியில் தங்கி உள்ளதால் தங்களால் அவருக்கு சம்மன் தர இயலவில்லை என்று கூறினர்.
இதையடுத்து கங்கா நகர் காவல் கண்காணிப்பாளரிடம், நிகால்சந்த்துக்கு சம்மன் கொடுக்கப்பட்டதை உறுதி செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் 19-ந் திகதி கங்கா நகருக்கு சென்ற நிகால்சந்த் அங்குள்ள ஒரு கிராமத்தை தத்தெடுத்தார். ஆனால் பொலிசார் மத்திய மந்திரியை கண்டுபிடிக்க இயலவில்லை என்று தொடர்ந்து கூறி வருகின்றனர்.
நீதிமன்றத்தில் நாளை நடைபெறும் விசாரணையின் போதும் அவர் ஆஜராகமாட்டார் என்று அவரது சொந்த ஊரான ராய்சிங் நகர் வாசிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Average Rating