பஸ் விபத்தில் 56 பேர் பலி!!
பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சி நகரில் இருந்து இன்று புறப்பட்டுச் சென்ற பஸ், வேகமாக சென்ற லாரி மீது மோதிய விபத்தில் 21 பெண்கள், 18 குழந்தைகள் உள்பட 56 பேர் பரிதாபமாக பலியாகினர்.
சுமார் 70 பயணிகளுடன் கராச்சியில் இருந்து கைபர்-பக்துங்க்வா மாகாணம் நோக்கி இன்று காலை புறப்பட்டுச் சென்ற அந்த பஸ், வழியில் டீசல் நிரப்புவதற்காக சுக்குர் மாவட்டத்தின் தேரி புறவழிச்சாலையின் ஓரத்தில் உள்ள ஒரு டீசல் பங்கில் நின்றது.
டீசலைல் நிரப்பிக் கொண்டு, மீண்டும் நெடுஞ்சாலைக்கு அந்த பஸ்சை செலுத்திய டிரைவர், அதே வழியில் வேகமாக வந்த லாரியை கவனிக்க தவறியதால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ், கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் 21 பெண்கள், 18 குழந்தைகள் உள்பட 56 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். படுகாயமடைந்த 15-க்கும் மேற்பட்டோர் சுக்குர் மற்றும் கைர்பூர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கோர விபத்து பற்றிய தகவல் அறிந்த பாகிஸ்தான் அதிபர் மம்நூன் ஹுசைன் மற்றும் சிந்து மாகாண கவர்னர் இஷ்ரத்துல் எபாட் ஆகியோர் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளதுடன், உடனடி விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளனர்.
Average Rating