நடனப்பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி நடனமாட வைத்த போலீஸ்காரர்!!
உத்தரப்பிரதேச மாநிலம், ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள நிகோஹ்லி காவல்நிலையத்தில் காவலராக பணிபுரியும் சைலேந்திர குமார் சுக்லா என்பவர் துப்பாக்கி முனையில் நடனப்பெண்ணை மிரட்டி நடனமாட வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண்ணை மிரட்டி நடனமாட வைத்ததுடன் அவர் மீது பணத்தையும் சுக்லா விசிறி எறிந்த வீடியோவும் வெளியாகியுள்ளது.
ராம்லீலா விழாவின் போது மேடையில் அப்பெண் நடனமாடிக்கொண்டிருந்தபோது போதையில் மிதந்தவாறு சுக்லா அங்கு வந்துள்ளார். நேரடியாக மேடைக்கு சென்ற அவர் தான் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் நடனப்பெண்ணை கொன்று விடுவேன் என கூறி தன் முன் நடனமாடுமாறு மிரட்டியுள்ளார். பயந்து போன அப்பெண்ணும் நடனமாட ஆரம்பித்துள்ளார். அப்போது தான் கையில் வைத்திருந்த ரூ. 30000 பணத்தில் இருந்து ரூ.500 மற்றும் ரூ.100 ஆகியவற்றை உருவி அப்பெண்ணின் மேல் வீசியுள்ளார்.
பின்னர் அவரும் அப்பெண்ணுடன் சேர்ந்து நடனமாட ஆரம்பித்துள்ளார். ஏறத்தாழ ஒரு மணி நேரம் நடனமாடிய பின் அங்கிருந்து வெளியேறியுள்ளார் சுக்லா. இந்த நிகழ்வை படம்பிடித்த ஒருவர் சமூக வலைதளமான யூ டியூபில் அதை வெளியிட, சுக்லாவின் செயல் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து சுக்லாவை பணியிடை நீக்கம் செய்து ஷாஜகான்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராகேஷ் சந்திர சாகூ உத்தரவிட்டார்.
Average Rating