ராஜீவ் கொலை சதி விவரங்களை பிரபாகரன் வெளியிடவேண்டும் நீதிபதி ஜெயின் பேட்டி
ராஜீவ்காந்தி கொலை சதி விவரங்களை விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் வெளியிடவேண்டும் என்று, நீதிபதி ஜெயின் கூறினார். புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வரலாற்று தவறு என்றும், அதற்காக வருந்துவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். “இந்திய அரசும் இந்திய மக்களும் கடந்த காலத்தில் நடந்த இந்த சம்பவத்தை பெருந்தன்மையுடன் பின்னுக்கு தள்ளிவிட்டு இலங்கை இனப்பிரச்சினையை புதிய பார்வையுடன் அணுகவேண்டும்” என்றும் பாலசிங்கம் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
விடுதலைப்புலிகளின் இந்த பேட்டி பற்றி ராஜீவ்காந்தி கொலை சதி பற்றி விசாரணை நடத்திய நீதிபதி ஜெயினிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த ஜெயின், ” ராஜீவ் கொலை பற்றி விடுதலைப்புலிகள் வருத்தம் தெரிவிப்பது அர்த்தமற்றது” என்றார். “ராஜீவ் கொலை சதி பற்றிய விவரங்களை விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் வெளியிடவேண்டும்” என்றும், “ராஜீவ் கொலை தொடர்பான சர்வதேச சதி பற்றி மத்திய அரசு விசாரணை நடத்தவேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.