இலங்கை ஆளுங்கட்சி தலைவரானார் ராஜபக்ஷே!
இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே, ஆளுங்கட்சியான இலங்கை சுதந்திர கட்சியின் தலைவராகியுள்ளார். இலங்கையில் சுதந்திராக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு பதவி வகித்து வருகிறது. அக்கட்சியைச் சேர்ந்த ராஜபக்ஷே அதிபராக உள்ளார். இதுவரை கட்சித் தலைவர் பதவியை அவர் வகிக்காமல் இருந்து வந்தார். இந் நிலையில் தற்போது கட்சியின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பண்டார நாயகே குடும்பத்தினர்தான் இதுவரை சுதந்திராக் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து வந்தனர். முதல் முறையாக அந்தக் குடும்பத்தைச் சேராத ஒருவர் கட்சித் தலைவராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சித் தலைவராக போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார ராஜபக்ஷே. இதுவரை கட்சியின் தலைவராக முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா இருந்து வந்தார். அதிபர் பதவியை விட்டு சந்திரிகா விலகிய பிறகு கட்சித் தலைவர் பதவியிலிருந்து அவரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் பதவியிலிருந்து விலக சந்திரிகா மறுத்து வந்தார். இந்நிலையில் கொழும்பில் நடந்த கட்சியின் கூட்டத்தில் சந்திரிகாவை நீக்கி விட்டு ராஜபக்ஷேவைத் தலைவராக்க தீர்மானிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சந்திரிகாவுக்குப் பதில் புதிய தலைவராக ராஜபக்ஷே தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் சுதந்திராக் கட்சியின் தலைமைப் பொறுப்பு முதல் முறையாக பண்டார நாயகே குடும்பத்திடமிருந்து கை மாறியுள்ளது.
தலைவர் பதவியைக் கைப்பற்றியிருப்பதன் மூலம் அரசு மற்றும் கட்சி நிர்வாகத்தை தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார் ராஜபக்ஷே. தற்போது இலங்கையில் நிலவும் சூழ்நிலையில் கட்சித் தலைவராக ராஜபக்ஷே தேர்வாகியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.