மண்டபம் முகாம்புதுப்பிக்க ரூ.27 லட்சம்
மண்டபம் அகதிகள் முகாமை பராமத்து செய்ய தமிழக முதல்வர் கருணாநிதி ரூ. 27 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மண்டபம் அகதிகள் முகாம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களின் நிலை மோசமாக இருப்பதாக வந்த தகவலையடுத்து அந்த முகாம்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள் சுப.தங்கவேலன் மற்றும் பெரியகருப்பன் ஆகியோரைக் கொண்ட குழுவை தமிழக முதல்வர் நியமித்தார். அகதிகளுக்கான குடியிருப்புகள் மற்றும் அடிப்படை சாதனங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன என்று அமைச்சர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படியும், மறுவாழ்வுத்துறை ஆணையரின் பரிந்துரைகளின்படியும் மண்டபம் முகாமில் பழுதடைந்த நிலையில் உள்ள குடிசைகள், கழிவறைகள், சாலைகள் ஆகியவற்றை செப்பனிடவும், குடிசைகளில் மின் இணைப்பு வசதி, தெருவிளக்கு ஆகியவற்றை புதுப்பித்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக மொத்தம் ரூ. 27 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய்க்கு ஒப்புதல் அளித்தும், முதல் கட்டப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள முன்பணமாக ரூ. 15 லட்சம் பணத்தை விடுவித்தும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.