புலிகளின் தடைநீக்கம்! விளக்கேற்றவா? -வின்சென்ட் ஜெயன் (சிறப்புக் கட்டுரை)..!!

Read Time:17 Minute, 13 Second

timthumb (1)முஸ்லிம் தீவிரவாதிகளின் செயற்பாடுகளை குறித்து ஐரோப்பிய புலிகளின் கருத்து என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக தொடர்பு கொண்டிருந்தேன்..

”நீதி கேட்டு ஐ.நா நோக்கி” என்ற துண்டுப்பிரசுரத்தில் கிடைக்கப் பெற்ற தொடர்பிலக்கத்திற்கு தொடர்பு கொண்ட போது, ”உண்மையில் அதைப்பற்றி எமக்கு ஒன்றும் தெரியாது, அந்த விடயங்களும் எமக்கு சம்மந்தப்பட்டதில்லை அதனால் கவனமும் செலுத்தவில்லை” என்ற பதில் கிடைத்தது.

குண்டுச் சட்டியில் குதிரையோட்டும் புலிகளுக்கு, தடையெடுத்தால் தானென்ன தடையை நீடித்தால் தானென்ன? என்ற எண்ணம் எனக்குள் மேலலோங்கிய நிலையில்..

சமகாலத்தில் சர்வதேச அரசியல் போக்குகள் எவ்வாறு நகருகின்றன என்பதை அறிய விருப்பமில்லாத இவர்கள், மீண்டும் ஐ.நா நோக்கி எந்த நீதியை கேட்டுப் புறப்படுகின்றார்கள்?

யுத்த காலத்தில் 2008-2009 தாக்குதல்கள் தீவிரிக்கப்பட்டிருந்த போது முதல் தடைவையாக மாடுகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து மக்களின் உயிரிரப்புக்கள் அதிகரிக்கத் தொடங்கியிருந்த நிலையில் நிலைமையை எடுத்துரைக்க ஏதாவது வழி காண வேண்டுமே என புலிகளின் ஐரோப்பிய ஊடக ஜம்பவான்கள் என தம்மைக் காண்பித்த நபர் ஒருவரிடம் இது தொடர்பாக கவலை தெரிவித்த போது,

அவர் சொன்ன பதில் ”10,000க்கும் மேலாக மக்களின் இறப்பு தாண்டினால், ஐ.நா தானாக நடவடிக்கை எடுக்கும்”.. உண்மையில் கடும் கோபத்திற்கு ஆளாக்கிய இப்பதிலைக் கொண்டு “இவர்களின் அறிவு இவ்வளவு தான்” என்பதை அறிந்து கொள்ள முடிந்திருந்தது.

தொடர்ந்து ஏதாவது விடயங்களை குறிப்பிட்டால் கிடைக்கும் பதில்கள் ”வரலாற்றை படியுங்கள், அந்த நாட்டில் இது நடந்தது, அந்த அமைவு இந்த அமைவு ” என்பதே.

வரலாற்றை எழுதுபவர்கள் நிகழ் காலத்தில் இருக்கும் மனிதர்களாகிய நாங்களே! சர்வதேச போர் குற்றத்திற்காக தமிழர்களும் வரலாற்று சான்றாகி விட்டார்கள்.

இதை வைத்து இன்னெரு இனத்தின் அழிவை உலகம் தடுக்குமா? இதற்கு முன்னும் உகண்டா, யூதர்களின் படுகொலைகள் என பல வரலாற்றுப் பாடங்கள் இருந்தும் தமிழின அழிவை நிறுத்தினவா?

பொறுத்திருந்து பார்ப்போம்! காலம் தான் பதில் சொல்லும்! என தமது கட்டுரைகளை முடிக்கும் தமிழ் கட்டுரையாளர்கள் தம்மை அரசில் ஆய்வாளர்களாக கருதுவது தான், குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவதற்கு காரணமாயிருக்கின்றது போலும்.

தமிழ் மக்கள் நம்புவது போன்றோ அல்லது சிங்கள பேரினவாதத்தை கக்கும் கட்சிகள் கூச்சலிடுவது போன்றோ – நீதி கேட்டு பயணத்தை ஆரம்பித்தவர்களின் அழுத்தங்களோ, ஐரோப்பிய புலிகளோ, வேறெந்த புலம் பெயர்வாழ் தமிழர்களோ, தமிழமைப்புக்களோ, அல்லது தமிழ்தேசியக் கூட்டமைப்போ, எந்தத் தமிழனுமோ சார்வதேசத்தின் அழுத்தத்திற்கும், போர்க் குற்ற விசாரனைகளுக்கும் வித்திடவில்லை.

ஜே.டி.எஸ் என்ற புலம்பெயர் சிங்கள ஊடகவியலாளர்கள் தான் தமிழர்களுக்கான நியாயம் வேண்டும், இலங்கையில் நடந்தது திட்டமிட்ட இன அழிப்பு என்பதை எதுவித இலாப நோக்கமுமற்று சனல் 4 என்ற தொலைக்காட்சிக்கு காணொளி ஆதாரத்தை வழங்கியிருந்தார்கள்.

நடைபெற்றது ஒரு இன அழிப்பு, அதற்கான ஆதாரம் எமது சிறுவர்கள் தான் ஆகவே சிறுவர்கள் மூலமாக பொறப்படும் தகவலை ஆதாரமாகக் கொண்டு ஆவணப் படம் தயாரிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் தனிப்பட்ட முறையில் யோசனை சொல்லியிருந்தேன், அதற்கு அவர் தந்த பதில் ”முதலில் அவர்களுக்கு சோறு போடுங்கள்” இது தான் எங்கள் அரசியலின் சானக்கியம்.

ஜே.டி.எஸ் ஆல் கையளிக்கப்பட்ட காணொளியை அடிப்படையாகக் கொண்டு சனல் 4 செய்திகள் வெளிவரத் தொடங்கிய போது தான் மனித உரிமை ஆர்வலர்கள் அதிர்ச்சியல் விழித்தனர்.
இவ் விடயங்கள் ஏற்கனவே கவணத்திற்கு வந்ததையடுத்து தீர்மானங்களை நிறைவேற்ற வாக்கெடுப்பிற்கு மக்களின் பங்களிப்பு தேவைப்பட்டது உண்மை தான்.

ஆனால் புலம்பெயர் புலிகள் சொல்லுவது போல் புலி ஆதரவாளர்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதினாலும் அல்லது உலகம் எங்கும் ஊர்வலங்களை நடத்தியதினாலும் தான் ஐ.நா.வோ மனித உரிமை ஆர்வலர்களோ விழித்தெழுந்தார்கள் என மக்களை நம்ப வைப்பது முற்றிலும் பொய்.

சுமார் முப்பது வருட யுத்தகாலத்தில் சுமார் இருபத்தைந்து வருடங்கள் தனும் புலம்பெயர் தமிழர்கள் புலத்தில் வாழத் தொடங்கி விட்டார்கள் ஆனால் இன்று வரை ”எல்.ரீ.ரீ.ஈ” என்றால் என்ன என்று ஒரு வெள்ளைக் காரனுக்கும் தெரியாது. இது தான் புலத்தில் முன்னெடுக்கப்பட்ட கவணயீர்ப்பு.

இந்த விடயங்கள் இலங்கை அரசாங்கத்திற்கும் நன்றாக தெரியும், ஆனால் ஒன்றுக்கும் பிரயோயனமில்லாத இவ் விடயத்தினால் இலங்கைக்கு ஆபத்து என்று ஊதி பெருப்பித்து தமிழ் மக்களை தாயகத்தில் அடக்கியொடுக்கின்றது சிங்கள அரசு, இந்த ஊதிப் பெருப்பித்தல் இனவாதத்தை கக்குகின்ற சிங்கள கட்சிகளுக்கு நல்ல ஊட்டச்சத்தாக அமைகின்றது.

தமிழர்கள் இலங்கையில் இருக்கவே கூடாது என்பது தான் இன்றைய சிங்கள போரினவாத கட்சிகளின் கொள்கையாக மாறி விட்டது.

அதற்கு தமிழர்கள் நாமே தூக்கி கொடுக்கிறவர்களாய் இருக்கின்றோம்… சமூகத் தீண்டாமை, சீதனம், சாதித்தியம் போன்ற காரணங்களால் விதவைகளும் இளம் பெண்களும் இல்லற வாழ்வை இழந்து நிற்கின்றனர்.,

இவர்களை வாழவைக்க ராஜபக்ஸ தலைமையிலான சிங்கள இராணுவத்தினர் தமிழ் பெண்களை திருமணம் செய்கின்றனர். இதற்கு “இன ஐக்கியத்தின் அடையாளம்” என்ற போர்வையிடப்பட்டுள்ளது. இதனை தவிர்க்க முடியாமலுமுள்ளது.

திட்டமிட்ட இன அழிப்பு “மகாவம்சம்” என்ற புணைக்கதை உருவாகப்பட்டதிலிருந்து ஆரமப்பித்து விட்டதை, காலம் தாழ்த்தியே தமிழர்களாகிய நாம் உணர்ந்துள்ளோம். எனினும் நாம் விழிப்படைய மாட்டோம்.

ltte._flagஇவ்வளவு இழப்பின் பின்னரும் விழிப்படையாத புலம்பெயர் புலிகளுக்கும், தடையெடுத்தால் தானென்ன தடையிருந்தால் தானென்ன?

முறையான செயற்பாட்டு ரீதியல் புலிகள் புலம்பெயர் தேசங்களில் இயங்கவில்லை, அத்துடன் முறையான நிர்வாக ரீதியான தொடர்புகளையும் தத்தமது புலம்பெயர் தேசத்து நாட்டு மக்களிடமும் பேனவில்லை.

இதனால் ஈழப் போராட்டம் தொடர்பான தாக்கங்களை தத்தமது புலம்பெயர் வாழ் தேசியர்களிடத்தில் ஏற்படுத்தவுமில்லை. அப்படி ஏற்பட்டிருந்திருந்தால் தமிழர்களுக்கான அங்கீகாரம் என்றோ கிடைத்திருந்திருக்கும்.

போர் குற்றத்தை சர்வதேசம் தூக்கிப் பிடித்திருப்பது தமிழர்களுக்காக அல்ல, அப்படி நியாத்தின்படி சர்வதேம் நடந்திருந்திருக்குமேயானால் நிச்சயமாக போர் நிறுத்தப்பட்டிருக்கும்,

சர்வதேசம் எதிர்பார்த்த ஒன்றை இலங்கையிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியாத கட்டத்தில் தான் ”போர் குற்றத்தை” இலங்கைக்கு எதிரான ஆயுதமாக சர்வதேசம் பாவித்து வருகின்றது.

இந்த தருணத்தில் குறிக்கப்பட்ட இன அழிப்பிற்கான போர்க்குற்றம் தனி மனிதனை சார்ந்ததல்ல, சிங்கள பேரினவாத அரசை சார்ந்து என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

நாளை அமையும் புதிய அரசு முன்னைய அரசு எதை செய்ததோ அதையே தொடரும், இதுவே நாம் கற்ற பாடம், இதானல் தான் தமிழ் மக்களின் உணர்வு ”சுதந்திர தமிழீழம்” தான் என்பதை மறுப்பதற்கில்லை, என்ற அச்சம் தொடர்ந்தும் சிங்கள பேரினவரிகளிடம் இருக்கின்றது.

தமிழர்களின் உணர்வை எந்த பேரினவாதிகளும் விலை கொடுத்து வாங்கி அடக்கிவிட முடியாது என்பதை தமிழர்கள் ஏற்கனவே பல தேர்தல்களில் நிரூபித்தும் விட்டார்கள், அத்துடன் தமிழ் மக்களின் புனர்வாழ்வுப் பணியில் பல்வேறு விதமான முறையில் புலம்பெயர்வாழ் தமிழர்களே உதவி வருகின்றார்கள் என்பதும் சிங்கள அரசுக்கு நன்கு தெரியும்.,

இந் நிலையில் புலிகளுக்கு இருந்த தடையை ஐரேப்பிய நீதிமன்றம் நீக்கி இருப்பது சிங்கள அரசைப் பொறுத்தவரையில் வடக்கு-கிழக்கில் இராணுவத்தை நிலைநிறுத்தவும், மீதமுள்ள முன்னாள் போரளிகளை கொல்லுவதற்கும், பெண்களை விதவைகளாக்கவும், கைகொடுக்குமேயொழிய புலிகளுக்கல்ல.

புலிகள் தமக்கு நீக்கப்பட்டுள்ள தடையை பயன்படுத்தி மக்களுக்கு ஒரு தீர்வை காண வேண்டும் என்றால் அதற்கு முன்னர் தமது புதிய தலைவரை அறிவிக்க வேண்டியிருக்கும்.

தாயகத்தில் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டு விட்டார் என சிங்கள அரசு அறிவித்ததுடன் யுத்தம் முடிவடைந்து விட்டது, ஆனால் புலம்பெயர் புலிகள் தலைவர் சாகவில்லை என சத்தியம் பண்ணுகின்றனர்.

தலைவரின் மகன் கொல்லப்பட்டதற்காக ”ஐ.நா நோக்கி” என பதாதைகள் வெளியிட்டுள்ள புலம்பெயர் புலிகள், தலைவன் களத்தில் நின்று கொல்லப்பட்டார், அவர் மக்ளுடன் மக்களுக்காக மரணித்தார் என்பதை ஏற்க மறுத்தன் மூலம் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வை தடுத்து விட்டனர். அத்தனை இன்னுயிர்களின் தியாகமும் வீணடித்து விட்டார்கள்.

ஜே.டி.எஸ் இன் காணொளி ஆதாரத்தை சனல் 4 வெளியிட்டதையடுத்தே போரட்டம் மீண்டும் நகரத் தொடங்கியது.

தலைவர் ஒருவர் தப்புவதற்காக சுமார் ஒருலட்சம் வரையிலான மக்கள் கொல்லப்பட்டனர் என்பதையும், தமிழர்களின் தாயகம் தாரை வார்க்கப்பட்டுள்ளது என்பதையுமே சொல்லாமல் சொல்லி நிற்கின்றனர் புலம்பெயர் புலிகள்.

எந்தவிதமான அரசியல் சாணக்கியமுமில்லாத நம்பிக்கையை கடந்த 5 வருடங்களாக மக்கள் மனதில் வளர்த்து விட்டிருக்கிறார்கள்.

ஒரு மனிதனுக்கான ஆயுள் காலம் எவ்வளவு?, சரி அவர் திரும்பி வந்து என்ன தான் செய்ய முடியும்? என்ற சாதாரன கேள்விகள் எழாமலுமில்லை.

1. குருட்டுத்தனமான நம்பிக்கையை வளர்த்துள்ள நிலையிலிருந்து மக்களை விடுவிப்பது இன்று அவர்களுக்கு மேலும் சில்கல்களையும், சிதைவையும் ஏற்படுத்தும்.,

2. ஐரோப்பாவில் செயற்படுவதற்கு ஏற்ப உணர்வுள்ள, தன்னலமற்ற, அரசியல் சாணக்கியமுள்ள ஒருவரை தெரிவு செய்ய வேண்டும். இது சாத்தியமா?

3. புலிகள் அமைப்பிற்கு உலகநாடுகள் அனைத்துமே தடையெடுத்தாலும் தமிழ் மக்கள் தடையெடுப்பார்களா?

**மண்மீட்பு போர் நிதிக்கென நிதியுதவி செய்த பெரும்பாலானோர் கடும் நிதிநெருக்கடிகளுக்ளும், பொருளாதார சுமைகளுக்குள்ளும் மன விரக்தியிலுமிருக்க, நிதி சேகரித்த சிலர், பல நாடுகளில் பல வீட்டுக்கு சொந்தக்காரர்களாகவும், பல நாடுகளில் பல சொத்துக்கு உரிமையாளர்களாகவும், சௌகரியமாக இலங்கைக்கு சென்று வரக் கூடியவர்களாகவும் இருக்கும் போது, தமிழ் மக்கள் தடையெடுப்பார்களா???

4. தமிழ் ஈழத்துக்கான குரல் கொடுக்கும் அமைப்பாக மாத்திரமிராமல், அவசரகால பணிகளை செய்யத்தக்க, செயற்திறன் கொண்ட தன்னார்வ தொண்டர்களாக செயற்படுவதே புலம்பெயர் புலிகளின் செயற்பாட்டுக்கு வலு சேர்க்கும், இது போன்ற வேறு ஏதாவது செயற்பாட்டு ரீதியான செயற்பாடுகளை செய்ய முடியுமா?

மேலும் தழிழக மக்கள் தொப்புள் கொடியுறவு என தமிழீழத்திற்காக குரல் கொடுக்கின்றார்கள், தீக்குளித்துமிருக்கின்றார்கள். ஆனால் எந்த உறவுக்காக அவர்கள் குரல் கொடுக்கிறார்களோ, அதே அவர்களின் புலம்பெயர் உறவுகள் அவர்களுக்காக குரல் கொடுக்கிறார்களா?

சிறப்பாக தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக யாழ் மீனவர்கள் கூறும் கராணம் நியாயமானதாக இருந்தாலும், தமிழ் உறவுகளை தண்டிப்பதாகவும் இருக்கின்றது. இது சிங்கள அரசிற்கும் சாதகமானதாக அமைகின்றது. இந்த விடயத்தில் புலம்பெயர் புலிகளின் சாணக்கியம் என்னவாக இருக்கும்?

இவ் விடயங்களுக்கு ஆக்க பூர்வமான தீர்வுகளை காண்பதற்கு புலம் பெயர்வாழ் புலிகளும், மற்றும் தமிழ் அரசியல் ஆய்வாளர்களாக கட்டுரைகளை எழுதுபவர்களும் தீர்வுகாண வேண்டும்.
அல்லது போனால் புலிகளின் தடைநீக்கமானது விளக்கேற்றுவதற்கும், கூட்டங்கள் கூடுவதற்குமாகத் தான் இருக்கும்..!!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்களோட ‘பள்ளிப் பருவ’ போட்டோவைப் பார்க்கனுமா.. இங்க போங்க.. அப்டியே ‘ஷாக்’ ஆயிடுவீங்க!!!
Next post சேத்தியாத்தோப்பில் 16 வயது பெண் திருமணம் நிறுத்தம்: அதிகாரிகள் நடவடிக்கை!!