இலங்கை – தமிழக மீனவர் விவகாரம்: மக்களவையில் இன்று விவாதம்!!
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படும் விவகாரம் இன்று இந்திய மக்களவையில் விவாதிக்கப்பட்டது.
கேள்வி நேரம் முடிந்தவுடன் அதிமுக எம்பி வேணுகோபால், தமிழக மீனவர் விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கியும் அவர்களை கைது செய்தும் வருவதாக குறிப்பிட்டார்.
தமிழக மீனவர்களை மீட்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பினார். அவரை தொடர்ந்து பேசிய மற்றொரு அதிமுக எம்பி குமார், கச்சத்தீவு தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிதளம் எனவும் கச்சத்தீவை மீட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து மக்களவையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விளக்கமளித்தார். அதில் தமிழக மீனவர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி இலங்கை அதிபரோடு தொடர்ந்து பேசி வருவதாக கூறினார்.
மேலும் கச்சத்தீவு விவகாரம் உச்சநீதிமன்ற விசாரனையில் இருப்பதால்தான் அது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என கூறினார்.
மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க அனுமதி அளிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு முயற்சி செய்து வருவதாக கூறிய சுஷ்மா ஸ்வராஜ், மீனவர்கள் எல்லை கடந்து போகாத வண்ணம் அவர்களுக்கு ஜிபிஎஸ் கருவி வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
மேலும் மீனவர்களுக்கு அதற்கான படகு உரிமம் மற்றும் உடற்தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டு அவர்களுக்கு விரைவில் ஆழ்கடல் மீன்பிடி உரிமம் அளிக்கப்படும் என தெரிவித்தார். இதன் மூலம் மீனவர்கள் விவகாரத்தில் நிரந்தர தீர்வு காணப்படுமென எனவும் அவர் உறுதி அளித்தார்.
Average Rating