போலீஸ் சீருடையில் ஏட்டு என்று கூறி வந்த 4 மாத கர்ப்பிணி பெண் கைது!!
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது சிலுக்கன்பட்டி கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் பொன் இசக்கி மனைவி மேரி என்ற விஜயா (வயது40). பொன் இசக்கி இறந்து விட்டதால் விஜயா ராமநாதபுரம் மாவட்டம் பேய்க்குளம் பகுதியை சேர்ந்த சூரன் மகன் சக்திவேலை (35) 2-வதாக திருமணம் செய்து கொண்டாராம்.
சக்திவேல் உறைகிணறு பகுதியில் ஆட்டுக்கிடை போட்டு பராமரித்து வருகிறார். விஜயா தன்னை போலீஸ் ஏட்டு என்று கூறி போலீஸ் சீருடையில் சுற்றி வந்துள்ளார். நேற்று சாயல்குடி மற்றும் சிக்கல் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உறைகிணறு பகுதியில் சக்திவேலுடன் போலீஸ் சீருடையில் நின்று பேசிக்கொண்டிருந்த
விஜயா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணான தகவலை தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தபோது அவர் போலி பெண் போலீஸ் என்பதும், போலீஸ் என்று கூறி சக்திவேலை ஏமாற்றி திருமணம் செய்திருப்பதும் தெரியவந்தது. மேலும் இவர் தனது முதல் கணவர் கொலை வழக்கில் சிறை சென்று வந்தவர் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பான வழக்கு ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் உள்ளது. தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ள விஜயாவிடம் சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
போலி பெண் போலீஸ் விஜயா தன்னை போலீஸ் என்று கூறி எது மாதிரியான ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating