கணவரை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!!
சிதம்பரம் அருகே உள்ள அரியகோஷ்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 48). இவரது மனைவி சத்யா (38). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் பரங்கிப்பேட்டை அகரம் மெயின் ரோட்டில் வசித்து வந்தனர்.
சண்முகம் வேலைக்காக அடிக்கடி வெளிநாடு சென்று வந்தார். அப்போது சத்யாவுக்கும், எருக்கூர் கிராமத்தை சேர்ந்த அப்புவுக்கும் (31) கள்ளக்காதல் ஏற்பட்டது.
கடந்த 9.1.2012 அன்று சண்முகம் வீட்டில் இல்லாத நேரத்தில் அப்பு அங்கு வந்தார். பின்னர் அப்புவும், சத்யாவும் தனிமையில் இருந்தனர். அப்போது வீட்டுக்கு வந்த சண்முகம், அதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே சண்முகம், சத்யாவை கடுமையாக கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்த சத்யா, தனது கணவரை தாக்கி, முகத்தை துணியால் அமுக்கி கொலை செய்தார்.
இந்த கொலை குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சத்யா, மற்றும் அப்புவை கைது செய்தனர். இந்த வழக்கு சிதம்பரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கு நீதிபதி கிங்லி கிறிஸ்டோபர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட சத்யாவுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அப்பு விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து சத்யாவை போலீசார் வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்.
Average Rating