சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: வீடியோ கான்பரன்சிங் மூலம் போலீசார் அடையாள அணிவகுப்பு!!
புதுவையில் விபசார கும்பல் ஒன்று சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்தது.
விபசார கும்பலிடம் இருந்து 3 சிறுமிகள் மீட்கப்பட்டனர். அவர்களில் 14 வயது சிறுமி குழந்தை பெற்று இருந்தாள். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி விபசார புரோக்கர்கள் புஷ்பா, அருள்மேரி, ரகுமான்கான் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிகள் தங்களிடம் போலீஸ் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் அடிக்கடி வந்து சென்றதாக கூறினர். இதனையடுத்து சிறுமிகள் வழக்கை சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க ஐ.ஜி. பிரவீர்ரஞ்சன் உத்தரவிட்டார்.
சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் விபசார கும்பலுடன் போலீஸ் அதிகாரிகள் பலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதையடுத்து விபசார கும்பலுடன் தொடர்பில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் யுவராஜ், சுந்தர், ஆயுதப்படை சப்–இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், ஏட்டுகள் முருகவேல், பண்டரிநாதன், போலீஸ்காரர்கள் விஜயகுமார், செல்வகுமார், சங்கர் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். இதில் விபசார கும்பலுக்கு வாடகைக்கு வீடு கொடுத்த தமிழ்செல்வன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர் ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்கு பிறகு நீதிபதி பிரகாஷ் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–
சிறுமிகளுக்கு தங்களை யார் யார் பலாத்காரம் செய்தனர் என்பது தெரியவில்லை. இதனால் அடையாள அணி வகுப்பு நடத்துவது அவசியமாகிறது. ஆனால் வழக்கமாக நடக்கும் அணிவகுப்பு போல் இல்லாமல் வீடீயோ கான்பரன்சிங் மூலம் அடையாள அணிவகுப்பு நடத்த வேண்டும். அவர்கள் கேமிரா முன்பு நின்று சீருடையில் திரையில் தோன்ற வேண்டும். அப்போது மேல் சட்டையை கழற்ற வேண்டும். அணிவகுப்பின்போது சிறுமிகள் அருகில் பெண் மாஜிஸ்திரேட்டு இருக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து சி.ஐ.டி. போலீசார் அடையாள அணி வகுப்பை ரகசியமாக நடத்த தயாராகி வருகின்றனர்.
Average Rating