படம் ரிலீசான மறுநாளில் இருந்து திருச்சியில் லிங்கா பட திருட்டு சி.டி.க்கள் விற்பனை!!
திருச்சியில் படம் ரிலீசான மறுநாளே லிங்கா பட திருட்டு சி.டி.க்கள் விற்பனை தீவிரமாக நடப்பதால் தியேட்டர் அதிபர்கள், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படம் கடந்த 12–ந்தேதி ரிலீசானது. திருச்சி மாநகரில் 12 தியேட்டர்களில் லிங்கா திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இதில் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.60 லட்சத்திற்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் மேலும் அனைத்து தியேட்டர்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதற்கிடையே திருச்சி மாநகரில் கண்டோன்மெண்ட், தில்லைநகர் பகுதிகளில் பல கடைகளில் திருட்டு சி.டி.க்கள் விற்கப்படுவதாக ரசிகர்களிடையே பரபரப்பு எழுந்துள்ளது. மலைக்கோட்டை பகுதியில் மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார்யாதவ் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்ததின் பேரில் அந்த பகுதியில் தற்போது திருட்டு சி.டி. விற்பனை குறைந்துள்ளது.
ஆனால் கண்டோன்மெண்ட் மற்றும் தில்லைநகர் பகுதிகளில் உள்ள சில கடைகளில் இண்டர்நெட்டில் இருந்து லிங்கா படத்தை டவுன்லோடு செய்து பிரிண்ட் போட்டு திருட்டு சி.டி.க்களாக தற்போது ரூ.45–க்கு விற்பனை செய்து வருகிறார்கள். மேலும் பல புதுப்படங்களும் இதைப்போல பிரிண்ட் போட்டு திருட்டு சி.டி.களாக போலீசார் கண்காணிப்பையும் மீறி விற்பனை செய்யப்படுகிறது.
திருச்சி மாநகரில் முன்பெல்லாம் ரஜினி உள்பட பிரபல நடிகர்களின் படங்கள் திரையிடப்படும் போது குறைந்தபட்ச கட்டணமே ரூ.300 வரை வசூலிக்கப்படும். ஆனால் தற்போது மாவட்ட நிர்வாகத்தின் கெடுபிடியால் லிங்கா படம் திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் முதல் நாளிலேயே 100 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் அனைத்து தியேட்டர்களிலும் லிங்கா படத்தை காண ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
திருட்டு சி.டி.க்கள் வெளியில் ரூ.45–க்கு கிடைத்தாலும் தியேட்டரில் படம் பார்க்கும் திருப்தி கிடைக்காது என்பதால் ரஜனி ரசிகர்கள் அனைவரும் தியேட்டடர்களுக்கு சென்று லிங்கா படத்தை ஆர்வமுடன் பார்த்து செல்கிறார்கள்.
ஆனாலும் ஒருபக்கம் ஜரூராக நடைபெறும் திருட்டு சி.டி.க்கள் விற்பனையையும் போலீசார் தடுக்க வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Average Rating