மாணவி கடத்தல்: புதுவை போலீஸ்காரர்– கல்லூரி ஆசிரியர் கைது!!
புதுவை புதுக்குப்பத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 23), பட்டப்படிப்பு 3–ம் ஆண்டு மாணவர். விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி (பெயர் மாற்றம்), பிளஸ்–2 மாணவி.
தியாகராஜனும், காயத்ரியும் காதலித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் மயிலம் முருகன் கோவிலுக்கு சென்றனர். அங்கு ஒரு மரத்தடியில் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தனர்.
அந்த இடத்துக்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க 2 ஆண்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள், அந்த காதல் ஜோடியிடம் தங்களை போலீஸ்காரர் என்று அறிமுகப்படுத்தி கொண்டனர். பிறகு, இந்த இடத்தில் உங்களுக்கு என்ன வேலை? என்று கேட்டு மிரட்டி தியாகராஜனை துரத்தி விட்டனர்.
பின்னர் காயத்ரியை மட்டும் மோட்டார் சைக்கிளில் கடத்தி கொண்டு வீடூர் அணை நோக்கி சென்றனர். வழியில், மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். போலீசாரை கண்டவுடன் காயத்ரி தன்னை காப்பாற்றுமாறு அலறினார்.
உடனே போலீசார் வாகனத்தில் அந்த மோட்டார் சைக்கிளை துரத்தினர். அதனையறிந்தவுடன் காயத்ரியை கீழே இறக்கிவிட்டு 2 பேரும் தப்ப முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் பிடிபட்டவர்கள் புதுவை கரையாம்புத்தூர் பகுதியை சேர்ந்த ஐ.ஆர்.பி.என். போலீசார் ஸ்ரீதர் (30) என்பதும், சென்னை தனியார் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் வீரப்பன் (34) என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் விசாரணை நடத்தியதில், 2 பேரும் மாணவியை கடத்தி சென்றதை அறிந்தனர். அதன்பேரில் ஸ்ரீதர், வீரப்பனை போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட காயத்ரியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அந்த மாணவியை ஒப்படைத்தனர்.
Average Rating