அழைப்பிதழ் கொடுக்க சென்ற மணமகன் மாயம்: இன்று நடக்க இருந்த திருமணம் நிறுத்தம்!!
திருவண்ணாமலை கோபால் தெருவை சேர்ந்தவர் முகமது சபீர் (23), குவைத்தில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி திருவண்ணாமலைக்கு வந்தார்.
இவருக்கும் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நிச்சயிக்கப்பட்டு இவர்களின் திருமணம் திருவண்ணாமலையில் இன்று நடைபெற இருந்தது. இரு தரப்பினரும் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனது நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க செல்வதாக, முகமது சபீர் தனது வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தாய் சலீமா திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான முகமது சபீரை தேடி வருகின்றனர்.
மணமகன் மாயமானதால் இன்று நடைபெற வேண்டிய திருமணம் நின்றது. இதனால் இருவீட்டாரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர். இந்த சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating