செயின் பறிப்பை தடுக்க போலீஸ் எடுக்கும் நடவடிக்கை!!
சென்னையில் அதிகரித்து வரும் செயின் பறிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் தினமும் படாத பாடுபட்டு வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
ஏனென்றால் ஏதாவது ஒரு பகுதியில் சிறிய அளவில் செயின் பறிப்பு சம்பவம் நடந்து விட்டாலே போதும், அந்த எல்லைக்குட்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாரை உயர் அதிகாரிகள் ஒரு பிடி பிடித்து விடுகிறார்கள். இதற்கு பயந்தே போலீசார் கண்ணில் விளக்கெண்ணையை விட்டபடியே கண்காணித்து வருகிறார்கள். செயின் பறிப்பை கட்டுப்படுத்த 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக காலை 6 மணியில் இருந்து இரவு 11 மணி வரை 3 ஷிப்டுகளாக பிரிந்து போலீசார் பணி செய்கிறார்கள். ‘‘செயின் பறிப்புக்கு எதிரான பணி’’ (ஆன்டி ஸ்னாச்சிங் டூட்டி) என்று இதற்கு போலீசார் பெயர் வைத்துள்ளனர்.
பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ளும் காலை நேரமான 6 மணியில் இருந்து 9 மணி வரையில் ஒரு ஷிப்டாகவும், மதியம் 2 மணியில் இருந்து 5 மணி வரை ஒரு ஷிப்டாகவும் இரவு 9 மணியில் இருந்து 11 மணி வரை ஒரு ஷிப்டாகவும் போலீசார் பணியாற்றுகிறார்கள். இந்த நேரங்களில் தான் செயின் பறிப்பு கொள்ளையர்கள் அதிகமாக கைவரிசை காட்டுவது கண்டறியப்பட்டுள்ளது. இதில் மதியம் 2 மணியில் இருந்து 5 மணி வரையில் (‘நான் பீக் அவர்’ என்று அழைக்கப்படும் பரபரப்பு குறைந்திருக்கும் நேரம்).
வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. சந்தேகத்துக்கிடமாக மோட்டார் சைக்கிளில் சுற்றுபவர்களை பிடிக்க போலீசார் இந்த நேரத்தில் வாகன தணிக்கையில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்த 3 ஷிப்டுகள் முடிந்த பின்னர் இரவு 11 மணியில் இருந்து இரவு காவல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் ரோந்து சுற்றி வருகிறார்கள். தினமும் ஒவ்வொரு துணை கமிஷனர்கள் தலைமையில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
செயின் பறிப்புக்கு எதிரான ரோந்து பணி உதவி கமிஷனர் ஒருவர் தலைமையில் மேற்கொள்ளப்படுகிறது. 3 இன்ஸ்பெக்டர்கள், 6 சப்–இன்ஸ்பெக்டர்கள், 18 போலீஸ்காரர்கள் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதையெல்லாம் தாண்டி செயின் பறிப்பு கொள்ளையர்கள் போலீசார் இல்லாத இடமாக பார்த்து செயினை பறித்து சென்று விடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating