கேரளாவுக்கு கஞ்சா கடத்தி விற்பனை: குமரி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் நண்பருடன் கைது!!
கேரளாவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்தது.
இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் சென்றதையடுத்து கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள்.
பள்ளி, கல்லூரிகள் பகுதியில் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா விற்பவர்களை கைது செய்தனர். தொடர்ந்து கஞ்சா விற்கும் கும்பலை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கொல்லம் அருகே கிழக்கு முக்கு என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் அந்த மோட்டார் சைக்கிள் நிற்காமல் வேகமாக சென்றது.
உடனே போலீசார் அவர்களை ஜீப்பில் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் நெய்யாற்றின்கரை மணலிவிளையை சேர்ந்த விஷ்ணு (வயது 21), மனோஜ் (29) என்பது தெரிய வந்தது.
அவர்களிடம் போலீசார் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பேசியதால் மோட்டார் சைக்கிளில் போலீசார் சோதனை செய்தபோது, 2 கிலோ கஞ்சாவை அவர்கள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
கைதான விஷ்ணு மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் படித்து வருகிறார். மனோஜ் அவரது நண்பர்.
மாணவர் விஷ்ணுவும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர். மேலும் கஞ்சா விற்பவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு உள்ளார்.
மார்த்தாண்டத்தில் இருந்து ஒரு கிலோ கஞ்சா ரூ.10 ஆயிரம் வீதம் 2 கிலோ கஞ்சாவை வாங்கிக் கொண்டு நண்பர் மனோஜுடன் கொல்லத்திற்கு சென்ற போது போலீசாரிடம் சிக்கி உள்ளார். அவர் யாருக்கு கஞ்சா சப்ளை செய்ய திட்டமிட்டார்? இதன் பின்னணியில் உள்ள கும்பல் ஆகியவை பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating